வெற்றி என்பது…..

 “உங்களுக்கு என்னப்பா, மூன்றே பருவங்கள்தான் வெப்பம், அதிக வெப்பம், மிக அதிக வெப்பம். அங்கே, அமெரிக்காவில் அப்படியா?  வீட்டு வாசலில் மூன்றடிக்குப் பனி விழுந்து கிடக்கிறது. அம்மாவிற்கு ஒத்துக்காது . சென்னைக்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டேன்!” என்றார் நண்பர்  நான் புன்னகைத்தேன். சியாச்சின் என் எண்ணங்களில் சிரித்துக் கொண்டிருந்தது

 

பூமிக்கு இரு துருவங்கள் என பூகோளப் பாடப் புத்தகங்கள் நமக்குச் சொல்லியிருக்கின்றன. மூன்றாவதாகவும் ஒரு ‘துருவம்’ உண்டு. அது சியாச்சின். உண்மையில் அது துருவம் அல்ல. அதாவது ஒரு முனையல்ல. அது ஓர் பனிகட்டி..உலகின் மிகப் பிரம்மாண்டமான பனிக் கட்டிகளில் ஒன்று (72 கீ.மீ நீளம்) சுற்றிலும் நெடிதுயர்ந்து நிற்கும் பனிச்சிகரங்கள் சுழன்றடிக்கும் காற்றின் மூலம் ஓயாது பனி தூவிக் கொண்டிருப்பதால் இந்தப் பனிகட்டியில் உள்ள பனியின் ஆழமும் அளவும் துருவப் பகுதிகளுக்கு நிகரானது என்பதால் இது ‘மூன்றாம் துருவம்’

 

இந்த மூன்றாம் துருவத்தில், ஹனுமந்தப்பா புதையுண்ட போது மூன்றடிக்கு அல்ல, முப்பது அடிக்குப் பனி குவிந்து கிடந்தது. அவரையும் அவரது சகாக்களையும் மீட்டெடுக்க நடந்த முயற்சி மனித ஆற்றலின் சிகரம். மனத் திண்மையின் உச்சம். மரணத்தைத் துச்சமாக மதித்து நடந்த ஓரு போராட்டம்.

 

19,500 அடி உயரத்தில் இருக்கிறது சியாச்சின். அந்த வெள்ளிப் பனிமலையில் உலவுவது கிடக்கட்டும், மூச்சுவிடுவதே சிரமம். ஏனெனில் காற்றில் ஆக்சிஜன் குறைவு. மைனஸ்55 டிகிரி குளிர். சுழன்றடிக்கும் காற்று. பெய்வதும் நிற்பதுமான பனிமழை. பதினைந்து நிமிடத்திற்கு மேல் அந்தப் பனி வெளியில் நிற்க முடியாது

 

புதைந்து கிடக்கும் உடல்களை மீட்க வேண்டுமானால் உறைந்து கிடக்கும் பனியை உடைக்க வேண்டும். அதுவோ கான்கீரிட்டை விடக் கடினமாக இருந்தது  இறுகிக் கிடந்த பனியை உடைப்பது அத்தனை எளிதாய் இல்லை. அங்குலம் அங்குலமாகச் செதுக்கித்தான் அகற்ற வேண்டும்.

 

அசரவில்லை நம் ராணுவம்.150 ராணுவ வீரர்கள் களமிறங்கினார்கள். 20, 20 பேர் கொண்ட குழுவாகப் பிரித்துக் கொண்டார்கள். ஒவ்வொரு குழுவும் அரைமணிநேரம் வேலை செய்யும். பின் ஓய்வு.பின் வேலை.

 

இயந்திரத் துளைப்பான்கள், மின்சார ரம்பங்கள், ஆழத்தில் ஊடுருவித் தேடும் ரேடார்கள், ரேடியோ அலைகள் மூலம் கண்டறியும் சாதனங்கள் என ஹெலிகாப்டர்கள் 200 நடை போய் எடுத்து வந்தன. அத்தோடு அவர்கள், டாட், மிஷா இரு நண்பர்களையும் அழைத்து வந்தார்கள். இருவரும் மோப்ப நாய்கள்!. என்றைக்கும் நாய்கள்தானே மனிதனின் ‘பெஸ்ட் பிரண்ட்!’

 

 

ஒருநாளல்ல, இருநாளல்ல, ஐந்து நாள்கள் போராடினார்கள். அந்த ஐந்துநாளும் பனிப்பாறைகளின் இடுக்கில் இருந்த காற்றை சுவாசித்துக் கொண்டு ஹனுமந்தப்பா உயிரைப் பிடித்துக் கொண்டு காத்திருந்தார். ஐந்தாம் நாள் அந்திமாலையில், அவரை வெற்றிகரமாக வெளியே கொண்டு வந்து விட்டார்கள். காத்திருந்த ஒரு மருத்துவர் குழு அங்கேயே அவருக்கு சிகிச்சை அளித்தது. காரணம் இருட்டிவிட்டதால் ஹெலிகாப்டர்கள் பறக்க முடியாத நிலை. இருள் விலகியதும் புறப்பட்டார்கள். பனிமழை. 150 அடிக்கு அப்பால் பார்க்க முடியாது. மலைகளுக்கு இடையிலான குறுகிய வெளியில், சுழன்றடிக்கும் காற்றில் அங்குலம் அங்குலமாக முன்னேறி சமவெளியில் வந்திறங்கியது ஹெலிகாப்டர்.

 

பனிவெளியில் மீட்டுப் பாதுகாத்தவரை, புதுதில்லியில் பறிகொடுத்தோம்   

 

வெற்றி என்பதின் அளவு கோல், அருமை மாணவர்களே, முடிவுகளில் அல்ல. முயற்சிகளில்தான் இருக்கிறது

 

About the Author

maalan

Maalan, born in 1950 in Srivilliputhur, Tamil Nadu, emerged as a literary figure with a penchant for poetry. At the age of 16, he made his debut in the literary world through both poetry and prose. From 1970 to 1985, he contributed numerous short stories and poems in literary journals throughout Tamil Nadu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these