ஆழமும் தெளிவும் அமைந்த நதி

maalan_tamil_writer

பொதுமக்களிடையே நன்கு அறிமுகமான, ஆனால் பாரமர்களால் குறைவாக வாசிக்கப்பட்ட, வாசித்தவர்களாலும் குறைவாகப் புரிந்து கொள்ளப்பட்ட நூல் பகவத் கீதை. அதனை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் மேலோட்டமாகக் கேள்விப்பட்டதைக் கொண்டு பேசுகிறவர்கள் அதனை, விவிலியம், குரான், குருகிரந்த சாகிப் போன்ற நூல்களைப் போலக் கருதி அது இந்து மதத்திற்கானது என்பார்கள். வேறு சிலர் ‘கீதை போர் புரியத் தூண்டும் நூல்’ என்பார்கள். சிலர் இதை ஒழுக்கத்திற்கான வழிகாட்டி என்பார்கள். ஆச்சரியம் என்னவென்றால் இவை எல்லாவற்றிற்கும் இடமளிக்கும் நூல் என்பதுதான்.ஆனால் அதற்கும் அப்பாற்பட்ட பரிணாமங்கள் அதற்கு உண்டு. வெற்றிக்கும் அமைதிக்கும் வழிகாட்டும் நூல் அது.

காந்தி, பாரதி, காஞ்சிப்பெரியவர் போன்றவர்கள் கூட பகவத்கீதையை வெவ்வேறு கோணங்களில் பார்த்தார்கள். “மூன்று காரணங்களால் கீதை இணையற்ற நூலாக விளங்குகிறது. முதலாவதாக அது உபதேசிக்கப்பட்ட சந்தர்ப்பம். இரண்டாவதாக அந்த உபதேசத்தைப் பெற்ற நபரின் தகுதி. மூன்றாவதாக தனிநபர் முயற்சிக்குக் கீதை கொடுக்கும் முக்கியத்துவம். ஆகிய இக்காரணங்களால் கீதை தன்னிகரற்று விளங்குகிறது…பகவத் கீதையின் விசேஷம் என்னவென்றால் இதை உபதேசிப்பதற்கு பகவான் போர்க்களத்தைத் தேர்ந்தெடுத்ததும் போர் செய்ய மறுத்து எந்த நிமிஷத்திலும் தலை போய்விடக்கூடிய அபாயத்தில் இருந்தவனுக்கு இது உபதேசிக்கப்பட்டதுதான். ஆன்மீக ஞானத்திற்கு மனிதன் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது” என்கிறார் காஞ்சிப் பெரியவர்.

காந்தி தன் வாழ்வில், அரசியல், சமூகம், மதம் என்ற மூன்று முனைகளில் போராடினார். அந்தப் போராட்டங்களில் நெருக்கடிகளையும், ஏமாற்றங்களையும், மன அழுத்தங்களையும் எதிர்கொண்டார். “ என்னை சந்தேகங்கள் அச்சுறுத்தியபோது, ஏமாற்றங்களை எதிர்கொண்ட போது, எந்த வழியும் புலப்படாமல் இருளில் ஆழ்ந்தபோது நான் பகவத் கீதையை நோக்கி ஓடுவேன், அதில் உள்ள ஏதேனும் ஒரு பாடல் எனக்கு ஆறுதல் அளிக்கும், உடனே பெரும் துயரத்திற்கு இடையேயும் நான் புன்னகைப்பேன் என்பதை உங்களுக்குச் சொல்கிறேன்” என்கிறார் காந்தி.( I confess to you that, when doubts haunt me, when disappointments stare me in the face, and when I see not one ray of light on the horizon, I run to the Bhagavad Gita and find a verse to comfort me, and I immediately begin to smile in the midst of overwhelming sorrow.” -Gita -the mother, M.K.Gandhi)  

காந்திக்கு முன்னதாகவே இந்தக் கருத்தைச் சொன்னவர் பாரதியார்.       “மனிதன் சகல துக்கங்களிலிருந்தும் விடுபடும் வழியைப் போதித்தலே இந்த நூலின் (பகவத் கீதையின்) முதற்கருத்து” என்று எழுதுகிறார் பாரதியார்.

துக்கங்களுக்குக் காரணம் என்னவென்று தெரிந்தால் அதிலிருந்து விடுபடும் வழியையும் கண்டு கொள்ள முடியும். துக்கங்களுக்குக் காரணம், நாம், நம் செயல்கள் அல்லது நம் அமைப்பு, அல்லது நம் குடும்பத்தினர் போன்றவர் மீது வைக்கும் பற்று, அதைக் குறித்து ஏற்படும் சந்தேகம், அந்த சந்தேகத்தால் ஏற்படும் பயம், அதை அடுத்து ஏற்படும் கலக்கம், அதனால் ஏற்படும் மனச் சோர்வு, இவைதான் நமது துக்கங்களுக்கான காரணங்களாகின்றன. பகவத் கீதை பற்றி எழுதும் போது பாரதி எழுதுகிறார்: “எல்லாவிதமான பற்றுக்களையும் களைந்துவிட்டு, மனச்சோர்வுக்கும் கவலைக்கும்,கலக்கத்திற்கும், பயத்திற்கும், இவை அனைத்திலும் கொடியாதாகிய ஐயத்திற்கும் இடம் கொடாதிரு. ‘ஐயமுற்றான் அழிவான்’

எல்லாவிதமான பற்றுக்களையும் களைதல் -நிஷ்காம்ய கர்மா- இதுதான் கர்மயோகத்தின் சாரம். துயரத்தில் தொடங்கி மோட்சத்தில் முடிகிற பதினெட்டு யோகங்களைக் கொண்டது என்றாலும் கர்மயோகம்தான் பகவத்கீதையின் இதயம். கர்மா என்ற சமஸ்கிருதச் சொல் தமிழில் கடமை என்ற பொருளில் இப்போது வழங்கப்படுகிறது. பாரதியார் அதனைச் செயல் என்று அர்த்தப்படுத்துகிறார். சில காலம் முன்புவரைகூட அது செயல் என்ற பொருளில்தான் வழங்கப்பட்டு வந்தது. காமராஜருக்கு கர்ம வீரர் என்று ஒரு சிறப்புப் பட்டம் உண்டு. அதாவது செயல் வீரர்.

கடமைக்கும் செயலுக்கும் ஒரு நுண்ணிய வேறுபாடு உண்டு. அதனை வார்த்தைகளால் விளக்க முடியாது. சுருக்கமாகச் சொன்னால் நாம் எல்லா நேரமும் கடமையைச் செய்து கொண்டிருக்கிறோம் எனச் சொல்ல முடியாது. ஆனால் எல்லா நேரமும் ஏதோ ஒரு செயலைச் செய்து கொண்டிருக்கிறோம். (சும்மா இருப்பதைப் பற்றிய திரை நகைச்சுவைக் காட்சியை நினைத்துப் பாருங்கள்!) இதை பாரதியார் “ எவனும் ஒரு கணப் பொழுதேனும் செய்கை இன்றி இருப்பதில்லை” என்கிறார்.ஏன் இருப்பதில்லை? ஏன் இருப்பதில்லை என்றால் இருக்க முடியாது. செய்கை என்பது மனித இயல்பு. நம்முடைய இயல்பான குணங்கள் நம்மைச் செயல்களைச் செய்யத் தூண்டுகின்றன. அறிந்து கொள்ளும் ஆர்வம் என்பது (curiosity) என்பது மனித இயல்புகளில் ஒன்று. எல்லா மனிதருக்கும் அது உண்டு. ஆனால் எல்லோருக்கும் அது ஒன்று போல, ஒரே அளவில் இருப்பதில்லை. அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகம் உள்ளவன் நிலவில் என்ன இருக்கிறது என்று ஆராய ஆர்வம் கொள்கிறான். ஆர்வம் குறைவாக இருப்பவன் வழியில் உள்ள கிணற்றை எட்டிப்பார்த்துவிட்டு நகர்ந்து விடுகிறான். படைத்தல் என்பது மனித சுபாவம். ஒரு குழந்தை கூட எதையோ வரையப் பார்க்கிறது. படைப்பார்வம் அதிகம் இருப்பவன் ஓவியனாகவோ கவிஞனாகவோ, ஏதோ ஒன்றைப் படைப்பவனாகிறான். அது அவனுக்கு வருமானமோ புகழோ தராத போதிலும் அதை அவன் கைவிடுவதில்லை. படைப்பார்வம் குறைவாக இருப்பவன் ‘பொழுது போகாமல்’ எதையோ கிறுக்கிப் பார்த்து நிறைவு கொள்கிறான். செய்கை என்பது மனித சுபாவம். அதானல்தான் இப்போதெல்லாம் பணிக்கு ஒருவரைத் தேர்வு செய்யும் போது நேர்காணலுக்கு வந்தவரின் சான்றிதழ்களை மட்டும் பார்ப்பதில்லை. அவரது இயல்பான ஆர்வம் (aptitude) எந்தளவு இருக்கிறது என்றும் கணிக்கிறார்கள்.

பாரதி இதை மிகச் சுருக்கமாகச் சொல்கிறார்: “ எவனும் ஒரு கணப் பொழுதேனும் செய்கை இன்றி இருப்பதில்லை. இயற்கையில் விளையும் குணங்களே எல்லா உயிர்களையும் அவசரமாகத் தொழில் புரிவிக்கின்றன”

செய்கை மனித இயல்பு என்றால் அதை எப்படிப் பற்றில்லாமல் செய்வது? “இயற்கையின் குணங்களால் மயங்கியவர்கள் குணங்களிலும் தொழில்களிலும் பற்றுதல் அடைகிறார்கள்” என்கிறார் பாரதியார். இந்த மயக்கத்தில் இருந்து விடுபட்டுவிட்டால் பற்றை விட்டுவிடலாம். அதிலிருந்து எப்படி விடுபடுவது? எல்லாச் செயல்களும் இறைவனின் செயல்கள், அதை இறைவனுக்காகச் செய்கிறோம், இறைவனுக்கே இதை அர்ப்பணிக்கிறோம் என்ற ஞானம் வந்து விட்டால் அது எனது என்ற எண்ணம் நீங்கிவிடும். அப்போது ஆசை அதனால் ஏற்படும் மனக்குழப்பங்கள் நீங்கிவிடும். “எல்லாச் செயல்களையும் உள்ளறிவினால் எனக்கு அர்ப்பணமாகத் துறந்துவிட்டு, ஆசை நீங்கி, எனது என்பது அற்று,மனக்காய்ச்சல் தீர்ந்தவனாய் (போர்) செய்யக் கடவாய்” என்று கிருஷ்ணன் அர்ஜுனனிடம் சொல்கிறார் (பாரதியார் மொழிபெயர்ப்பு)

இதுதான் பகவத் கீதையின் சாரம். இதை அறிந்து கொண்டதால்தான் காந்திக்கு அவ்வளவு பெரிய போராட்டத்தை தலைமையேற்று நடத்தவும் அதில் எதிர்கொண்ட நெருக்கடிக்களை எதிர்கொள்ளவும் முடிந்தது.

நான் மூன்று முறை பகவத் கீதையை வாசிக்கும் வாய்ப்புப் பெற்றிருக்கிறேன். 19-20 வயது இருக்கும் போது முதலில் படித்தேன். ஒன்றும் புரியவில்லை. ஸ்திதப் பிரக்ஞன் என்ற சொல்மட்டும் பிடித்திருந்தது. அதை என புனைப்பெயர்களில் ஒன்றாக வைத்துக் கொள்ளலாமா என்னுமளவிற்குப் பிடித்திருந்தது. இருபது வருடம் கழித்து மறுபடியும் படித்தேன்.இந்த முறை பல கேள்விகளும் எதிர்வாதங்களும் மனதில் எழுந்தன.

சேவாலயா முரளி எழுதியிருப்பது போன்ற ஒரு நூல் எனக்கு அன்றே கிடைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! ஒருவேளை வாழ்வின் போக்கே கூட மாறியிருக்கலாம், பளிங்கு போன்ற ஆற்றின் அடித்தளத்தில் அமர்ந்திருக்கும் கூழாங்கற்களைத் துல்லியமாகப் பார்க்க முடிவது போல, முரளியின் பகவத் கீதையால் கடினமான விஷயங்களை எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது. அத்தனை தெளிவு. வாசித்தலும் புரிந்து கொள்ளுதலும் மிக எளிது. இது பாமரனின் பகவத் கீதை அல்ல. என் போன்ற பாமரர்கள் புரிந்து கொள்ளும் விதமாக எழுதப்பட்ட கீதை.

சில இடங்களை அனுபவத்தால் விளக்குகிறார். சில இடங்களைக் கதைபோல் சொல்லி சுவாரஸ்யம் கூட்டுகிறார். சில இடங்களில் நகைச்சுவைக்கும் குறை வைக்கவில்லை.

கீதையில் வரும் சொல்களில் ஒன்று ஸ்வதர்மம். ஒவ்வொருக்கும் ஓர் இயல்பு உண்டு என்பதைக் குறிக்கும் சொல். அதற்கு என்னென்னவோ விளக்கங்கள் கொடுத்து குழப்பி வைத்திருக்கிறார்கள். முரளி அதை எளிமையாக விளக்குகிறார் அவரது அனுபவத்திலிருந்து பிறக்கிறது அந்த விளக்கம்:

“சேவாலயா பள்ளியில் படிக்கின்ற பிள்ளைகளுக்கு career counselling செய்ய சில வல்லுநர்களை அழைத்துப் பேச வைக்கிறோம். அவர்கள் மானவர்களிடம், “நீங்கள் இன்ஜினியர், டாக்டர், வக்கீல் அல்லது ஆசிரியர் ஆகலாம். அல்லது அரசு வேலைக்குச் செல்லலாம். இப்படிப் பலவகையான துறைகள் இருக்கின்றன.நீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள்” என்று பொதுவாகச் சொல்லிவிட்டுப் போவதில்லை. இன்னும் ஒருபடி மேலே போய்,ஒவ்வொரு மாணவனது விருப்பம் என்ன என்ரு அறிந்து கொள்வதோடு நிறுத்திவிடாமல் உளவியல் முறைப்படி ஆய்வு செய்து அந்த மாணவனது இயல்பு, natural tendency என்ன என்றும் அதற்கேற்ற துறைகள் எவையெவை என்றும் சொல்வார்கள். இந்த natural tendencyதான் பகவத்கீதையில் சுதர்மம்”

இந்த natural tendency என்பது எப்படி வருகிறது? நூலைப் படியுங்கள். தெரிந்து கொள்வீர்கள்.

இளைஞனாக இருந்து படித்த போது கீதை எனக்குப் புரியவில்லை என்று சொன்னேன் அல்லவா, அப்படி எனக்குக் குழப்பம் தந்த வரிகளிலே ஒன்று இது: “செய்கையில் செயலின்மையையும், செயலின்மையில் செய்கையையும் எவன் காண்கிறானோ அவனே மனிதரில் அறிவுடையோன், அவன் எத்தொழில் செய்கையிலும் யோகத்தில் இருப்பான்” என்கிறது கீதை (பாரதியார் மொழிபெயர்ப்பு)

அது எப்படி செய்கையில் செயலின்மையைக் காண்பது என்பது எனக்கு அன்றிருந்த குழப்பம். இந்த நூலில் முரளி அதை அருமையாக விளக்குகிறார். பூமி ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ச்சியாகச் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு மேலே படியுங்கள். “திருவிழாவில் சுமார் 20 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றக் கூடிய ராட்டினத்தில் அமர்கின்றோம். அதில் சுற்றிவிட்டு வந்து தலைசுற்றுகிறது  என்கிறோம். ..1000 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ச்சியாகச் சுற்றிக் கொண்டிருக்கக்கூடிய ராட்டினம்தான் நாம் அமர்ந்து கொண்டிருக்கும் பூமி. ஆனால் அந்த வேகத்தை  அந்த சுழற்சியை நாம் உணர்வதே இல்லை.  சற்று கற்பனை செய்து பார்ப்போம். காலையில் வீட்டிலிருந்து அலுவலகம் செல்கிறோம். ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அலுவலகம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அங்கு எட்டுமுதல் பத்துமணி நேரம் வேலை செய்துவிட்டு மாலை வீடு திரும்ப வேண்டும் என்றால் வீட்டிற்குச் செல்ல வேண்டுமென்றால் வீட்டிற்குச் செல்ல முடியாது. ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த வீடு பத்தாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் தள்ளிச் சென்றுவிடும்.  மணிக்கு 1000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பூமியில் 10 மணி நேரத்தில் காலையில் இருந்த இடத்திலிருந்து பூமி பத்தாயிரம் கிலோ மீட்டர் நகர்ந்திருக்கும்.  நாம் வீட்டிற்குத் திரும்பியே போக முடியாது. கற்பனையே பயங்கரமாக இல்லையா?

பூமி ஒரே சீரான வேகத்தில் ஒரே திசையில் சுற்றிக் கொண்டிருக்கும் போது பூமியில் இருக்கும் ஏதேனும் இரண்டு புள்ளிகளுக்கிடையிலான தொலைவும் மாற்றமடைவதே இல்லை. தன்னைத்தானே சுற்றி வருதல்; சூரியனையும் சுற்றி வருதல்; விரிவடைந்து கொண்டே செல்லும் பிரபஞ்சத்தில் சூரியனை விடாமல் பின் தொடர்தல் என முப்பரிமாணங்களிலும் மிக வேகமாக இயங்கி வரும் பூமி அசையாமல் நிலைத்திருப்பது போல நமக்குக் காட்சியளிக்கிறது. இதைப் போலவே மகத்தான காரியங்களைச் செய்துவிட்டு ஒன்றுமே செய்யாமல் இருப்பது போல இருக்கமுடியுமா?மிகப் பெரிய செயல்களில்  செயலின்மையைப் பார்க்க முடியுமா? இதைப் பார்க்கத் தெரிந்தவந்தான் ஞானி” என்று விளக்குகிறார் முரளி

இப்படிப்பட்ட ஒரு ஞானிதான் முரளி. அவரது செயலுக்கு கண்ணெதிரே சாட்சியா நிற்கிறது சேவாலயா. அதன் பயணத்தை, அதன் வளர்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகிறேன். பிரமிக்க வைக்கும் பயணம். ஆனால் முரளி அன்று- 42 ஆண்டுகளுக்கு முன் -பார்த்தது போல அப்படியே இருக்கிறார். அதே எளிமை. அதே இனிய சுபாவம் ‘இவ்வளவு செய்திருக்கிறோம்’ என்று துளிக்கூட கர்வமில்லாத தன்னடக்கம். முதிர்ச்சி.

அப்படிப்பட்ட ஞானியிடமிருந்து வந்திருக்கிறது இந்த நூல். எனக்கு என் இளமையில் கிடைக்காத ஒரு வாய்ப்பு இன்று உங்களுக்குக் கிட்டியிருக்கிறது. வாசித்துப் பயன் பெறுங்கள்.     

பாமரனின் பகவத்கீதை நூலுக்கு எழுதிய முன்னுரை

One thought on “ஆழமும் தெளிவும் அமைந்த நதி

  1. மிக அருமை, சார். சேவாலயா முரளி அவர்களது புத்தகத்தை கண்டிப்பாக வாங்கிப் படிக்கிறேன். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.