பாரதிதாசனின் கதர் ராட்டினப் பாட்டு பற்றி திண்ணையில்

Display images below – Always display images from ksubashini@gmail.com

———- Forwarded message ———-
From: Subashini Tremmel <ksubashini@gmail.com>
Date: 2013/2/19
Subject: Re: [MinTamil] சும்மா கிடைத்ததா சுதந்திரம்?
To: மின்தமிழ் <mintamil@googlegroups.com>
Cc: Subashini Tremmel <ksubashini@gmail.com>

அன்பு தேமொழி,

 
இந்த நூலை த.ம.அ வலைப்பக்கத்திலிருந்து தேர்ந்தெடுத்து அதனை வாசித்து கட்டுரை வடிவில் உங்கள் கருத்துக்களையும் சேர்த்து எங்களோடு பகிர்ந்து கொண்டுப்பமைக்கு முதலில் என் மனமார்ந்த நன்றி.
 
மாலன் அவர்கள் அவ்வப்போது சில அரிய நூல்களை நமது சேகரிப்பிற்காகக் காட்டுவார். எனது எட்டயபுரம் பயணத்தின் போது எனக்கு எட்டயபுரம் ஜமீந்தார் தொடர்பான இரண்டு நூல்களைத் தேடி தகவல் சொன்னவரும் மாலன் தான். இப்படி சிறந்த நூல்களை வழங்குபவரின் தொகுப்பிலிருந்து இந்த நூல் நமது சேகரிப்பிற்குக் கிடைத்தது. 
இதனை நம் குழுவில் உள்ள திரு. நு த. லோகசுந்தரம் அவர்கள் மின்னாக்கம் செய்ய நா.கண்ணன் மின்னூலாக ஆக்கி அமைத்துக் கொடுக்க அதனை நான் நமது வலைப்பக்கத்தில் இணைத்து வெளியிட்டேன். இப்படி பலரது உழைப்பில் கிடத்ததொரு மின்னூல் இது.
 
திண்ணை இணைய இதழில் கட்டுரையாக வெளிவந்திருப்பதாலும் இவ்வகை செய்திப் பரிமாறல்களாலும் இந்த நூல் மட்டுமின்றி நம் தொகுப்பில் உள்ள ஏனைய நூல்களையும் பொது மக்கள் வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். 
 
அருமையான இக்கட்டுரைக்கு மீண்டும் என் நன்றி.
 
அன்புடன்
சுபா

 

2013/2/18 தேமொழி <themozhi@yahoo.com>

நன்றி திண்ணை வார இதழ்
http://puthu.thinnai.com/?p=18614
_________________________
 

 

barathida

 

மங்கையைப் பாடுவோருண்டு
மழலையைப் பாடுவோருண்டு
காதலைப் பாடுவோருண்டு
கருணையைப்  பாடுவோருண்டு
அன்னையைப் பாடுவோருண்டு
அரசினைப் பாடுவோருண்டு
கைராட்டினத்தைப் பாடுவாருண்டோ?
கதரினைப் பாடுவாருண்டோ?

என வியக்கலாம்.  கவிஞர்களின் கற்பனையில் உதிக்கும் கவிதைகளின் பாடு பொருட்களுக்கும், பாட்டுடைத் தலைவர்களுக்கும் வரம்பில்லை என்பதைத் தெளிவாக்குகிறார் பாரதிதாசன்.

இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில், இருபது பக்கமேயுள்ள கவிதை நூல் ஒன்றினை “கதர் இராட்டினப்பாட்டு” என்ற தலைப்பிட்டு வெளியிட்டிருக்கிறார் பாரதிதாசன்.  அக்கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகள் போற்றுவது கதரையும் கைராட்டினத்தையும். புதுவை நகரின் கலாநிதி அச்சகம் 1930 இல் வெளியிட்ட இந்த நூலின் அன்றைய விலை ஒன்றேகால் அணா. இந்த நூல் தமிழ் மரபு அறக்கட்டளையின் முயற்சியால் மின்நூல் வடிவம் கொடுக்கப்பட்டு, தமிழர்கள் அனைவரும் பயன் பெரும் வகையில் அவர்களது மின்நூல்கள் சேகரிப்பில் இடம் பெற்றுள்ளது.  தமிழ் மரபு அறக்கட்டளையின் இந்த முயற்சி போற்றுதலுக்குரியது.

கவிதை நூல் பிறந்த வரலாறு:
இந்த நூலினை அறிமுகப் படுத்தும் மாலன் அவர்களின் முன்னுரையின் மூலம் கவிதை நூல் பிறந்த உணர்ச்சி பூர்வமான கதையும் நமக்குத் தெரிய வருகிறது.

1920ம் வருடம் ஆகஸ்ட் 2ம் தேதி, வாழ்நாள் முழுவதும் கதர் அணியப் போவதாக உறுதி எடுத்துக் கொண்ட அண்ணல் காந்தி, 1921 முதல் அது தொடர்பான பிரசாரத்தைத் துவக்கினார். பாரதத்தில் ஒத்துழையாமை இயக்கம் பிறந்து வளர்ந்தது. மக்களுக்குச் சுதந்திர தாகமும் வளர்ந்தது. ஒத்துழையாமைப் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகும், அது வளர்த்துவிட்ட மக்கள் எழுச்சியை சுதந்திரப் போராட்டத்திற்கு வழியமைத்துக் கொடுக்க காந்தியால் கதர் இயக்கம் தொடங்கப் பட்டது. தமிழகத்தில் அந்த காதர் இயக்கத்தின் தாக்கத்தில் பாரதிதாசன் படைத்திட்ட நூல் இந்த கதர் ராட்டினப் பாட்டு கவிதை நூல். சுருங்கச் சொல்லின், இது அன்றைய தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட பிரச்சார பீரங்கிகளில் ஒன்று.
கவிதைகள் வடித்ததுடன் தானும் முற்றிலும் காதர் ஆடை அணியும் வழக்கத்திற்கு மாறினார் கவிஞர்.  தானே தனது கையினால் நூற்ற நூலில் கதர் சேலையை நெய்யச் செய்து தீபாவளிப் பரிசாகத் தனது மனைவிக்கு வழங்கியிருக்கிறார். அது போன்றே தன் கையால் நூற்ற நூலைத் திரித்து தனது குழந்தைக்கு அரைநாண் கயிறும் அணிவித்திருக்கிறார்.  அத்துடன் நில்லாது, கடன் கொடுக்கும் அடிப்படையில் கதர் துணி விற்பனையையும் செய்து மக்கள் கதராடை அணிய  ஊக்கப் படுத்தியிருக்கிறார் கவிஞர்.  அவரிடம் கடனுக்குத் துணி வாங்கிய புதுவை ஜெகநாதம் என்பவரின் குறிப்புகள் மூலம் இந்தத் தகவல்கள் தெரிய வந்துள்ளது.

பாரதிதாசன் அவர்கள் இந்த கதர் ராட்டினப் பாட்டு நூலை வெளியிட்டதும் தனது சொந்த செலவில்தான். தனது மனைவியின் பத்துச் சவரன் தங்கச் சங்கிலியை விற்று அந்தப் பணத்தில் அவர் கதர் ராட்டினப் பாட்டு நூலை வெளியிட்டதாகவும், அந்த நூலை குடும்பத்தினரே தைத்து ஒட்டி விற்பனைக்கு அனுப்பி வைத்ததாகவும் பாரதிதாசரின் மூத்த மகள் சரஸ்வதி குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் ஃபிரெஞ்சு காவல் துறையினரால் இந்த நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் கைகளுக்கு கிடைக்கா வண்ணம் பதுக்கப் பட்ட பிரதிகள் சில பின்நாளில் நாடு சுதந்திரம் அடைந்த பின்பு வெளியாகின. அவற்றில் ஒரு பிரதி 1990களில் பாரதிதாசனின் மகன், கவிஞர் மன்னர் மன்னனால் மாலன் அவர்களுக்குப் பரிசளிக்கப் பட்டு அவர் மூலம், நூலும், நூலின் வரலாறும் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்நூல் சேகரிப்பிற்குக் கிடைக்கப் பட்டுள்ளது.

கதர் இராட்டினப் பாட்டு:
(1) பாரததேவி, (2) ஜன்ம பூமியின் சிறப்பு, (3) காந்தியடிகளும் கதரும்/பறை முழக்கம், (4) சுதந்தரதேவியும் கதரும், (5) தேசத்தாரின் பிரதான வேலை, (6) இராட்டினச் சிறப்பு, (7) அன்னைக்கு ஆடை வளர்க, (8) பாரததேவி வாழ்த்து ஆகிய எட்டு சுவை மிகு நாட்டுப் பற்றினை மையமாகக் கொண்ட கவிதைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

“பாரததேவி”
விண்கொள் இமயமா வெற்பே திருமுடியாய்ப்
பண்கொள் குமரி பணிதாளாய் – மண்கொள்
வளமேதன் மேனியாய் வாய்ந்ததாய் வீரர்
உளமேதன் மேனிக் குவப்பு

என்று பாரத தேவியை வாழ்த்தும் முதல் வெண்பாவுடன் வாழ்த்துப் பாடலுடன் கவிதைகள் தொடர்கின்றன.  சிலபாடல்களுக்கு அவற்றைப் பாட வேண்டிய மெட்டுகளும் குறிப்பிடப் பட்டுள்ளது.  தேசத்தாரின் பிரதான வேலை என்ற கவிதையை குறத்திப் பாட்டு மெட்டில் பாட பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.   காந்தியடிகளும் கதரும் அல்லது பறை முழக்கம் என்ற பாடலுக்கு சுருதிபெட்டியின் ஸ்வரமும் கொடுக்கப் பட்டுள்ளது.  அந்தப் பாடலும் அதைப் பட விரும்புவோருக்கு கவதை நூல் வழங்கிய ஸ்வரமும் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

“பறை முழக்கம்”
அன்னியர் நூலைத் தொடோம் என்றசேதி
அறைந்திடடா புவி முற்றும் – எங்கள்
அறுபதுகோடித் தடக்கைகள் ராட்டினம்
சுற்றும்-சுற்றும்-சுற்றும்

இன்னும் செல்லாது பிறர்செய்யும் சூழ்ச்சிகள்
என்று சொல்லிப் புயம் தட்டு – அட
யானையின்மேல் வள்ளுவா சென்று நீபறை
கொட்டு-கொட்டு-கொட்டு

இதன்மெட்டு:
ஹார்மோனிய ஸ்வரம்

ஸரி க க / கா க க / கா க க / கா மா கா
அன்னியர் / நூலைத்தொ / டோமென்ற / சேதிய

ரீ கா ரீ / ரிக மா மா / மா மா ,, / கம பா
றைந்திட / டாஅபுவி / முற்றும்,, / எங்கள்

ஸ்ஸ் ஸ்¡ ஸா / ஸ்நி நீநீ / தா தா நீ* / பா மா கா
அறுபது / /கோஒடித / டக்கைகள் / ராட்டினம்

கா கா , / கா கா , / கா பம பா ,,
சுற்றும் / சுற்றும் / சுற்றும் ,,

ஸ்¡ ஸ்¡ நீ / ஸ்¡ ஸ் ஸ் ஸ்¡ ஸ் ஸ் / ஸ்¡ ஸ்¡ ரீ
இன்னும்சொல் / லாதுபி / றர்செய்யும் / சூழ்ச்சிகள்

ஸ்¡ ஸ்¡ நீ / தா தா தா / தா தா ,, / தப
என்றுசொல் / லிப்புயம் / தட்டு ,, / அட

பா ஸ்¡ ஸ்¡ / ஸ நி நீ நீ / தா தா நீ* / பா மா கா
யானையின் / மேல்வள்ளு / வாசென்று / நீபறை

கா கா / கா கா / காம மபா
கொட்டு / கொட்டு / கொட்டு

(* இக்குறி கருப்புக்கட்டை)

கருத்தைக் கவரும் மற்றொரு கவிதை சுதந்தரதேவியும் கதரும்.  பாடலின் தொடக்க வரிகள் ஒரு பெண்ணின் அழகை வர்ணிக்கிறது.  அந்த அழகியை நீ யாரென கவிஞர் வினவ அவள் தன்னை ‘சுதந்திர மங்கை’ என அடையாளம் சொல்லுகிறாள்.  ஆளை மயக்கிடும் மாதொருத்தி எனத் துவங்கும் அப்பாடலில் அவள் யாரென அறியும் வரை அது ஒரு நாட்டுப் பற்றினைக் குறிக்கும் பாடல் என்ற எண்ணம் வராது.  தொடர்ந்து வரும் வரிகளில் அந்த சுதந்திர மங்கை அவளை அடையும் வழியையும் உரைக்கிறாள். அந்நியர் துணிகளை வாங்காதே, நீயே நூல் நூற்று ஆடை நெய்து கதராடை உடுத்து. அந்நியர்களின் பொருட்களைப் புறக்கணிப்பதன் மூலம் அவர்கள் வணிகம் வீழ்ச்சி அடையும்.  அந்நியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த காரணத்தை கேள்விக்குரியாக்குவதன் மூலம் அவர்களை வெளியேற்றி இந்தியா சுதந்திரம் அடையலாம்.  எனவே சுதந்திரம் அடைய இராட்டினம் சுழட்று என்று சுதந்திர மங்கை அறிவுரை கூறுவதாக பாரதிதாசன் அறிவுரை வழங்குகிறார்.  அப்பாடலின் சில வரிகளும் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

“சுதந்தரதேவியும் கதரும்”
ஆளை மயக்கிடும் மாதொருத்தி – உடல்
அத்தனையும் பொன்னை ஒத்திருந்தாள் – அவள்
பாளை பிளந்த சிரிப்பினிலே – என்னைப்
பார்த்துரைத்தாள் எந்தநாளையிலே – உன்றன்
தோளைத் தழுவிடக் கூடும் என்றே – அடி!
சுந்தரி உன்பெயர் ஊர் எதேன்றேன் – அவள்
காளியனுப்பிய கன்னியென்றாள் – என்றன்
காதற் சுதந்தர மங்கையன்றோ அவள் (ஆளை)
.
.
.
கன்னியுரைத்தது கேட்டிடுவீர் – உள்ளக்
காதல் இருப்பது மெய் எனிலோ – அட
சின்ன இராட்டின நூலிழைப்பாய் – அதில்
தீட்டின்றி நெய்த உடை உடுப்பாய் – வரும்
அன்னியர் நூலைத் தலைகவிழ்ப்பாய் – அதற்
கப்புறம் என்னைக் கலந்திடுவாய் – என்று
கன்னியுரைத்து மறைந்துவிட்டாள் – அவள்
கட்டளைதன்னை மறப்பதுண்டோ – அந்த (ஆளை)

இந்தக் கவிதைத் தொகுப்பில் கருத்தைக் கவரும் மற்றொரு கவிதை சிறந்த உவமைக் கவிதையாக விளங்குகிறது.  அடிமை இந்தியாவின் சூழ்நிலை இங்கே மகாபாரதத்துடன் ஒப்பிடப்படுகிறது. கெளரவர் சபையில் துகிலுரிந்து மானபங்கம் செய்யப்பட்ட பாஞ்சாலியாகக் கவிஞருக்குத் தென்படுகிறாள் அந்நியர் வசம் அல்லலுறும் பாரதத்தாய். கண்ணா என் மானத்தைக் காப்பாற்று என்று பாஞ்சாலி கதறியபோது கண்ணன் ஆடை வழங்கி அவளது துயர் தீர்த்தான். இதனைக் கவிஞர் சுதந்திரப் போராட்டத்துடன் ஒப்பிடும் பொழுது அவர் கற்பனையின் வளம் நம் கருத்தைக் கவர்வதாக உள்ளது. கதறும் பாஞ்சாலியின் துயர் தீர்க்க வந்த கண்ணனுடன் காந்தியை ஒப்பிடுகிறார் பாரதிதாசன். பாரதத் தாயின் துயர் தீர்க்க கதர் இயக்கம் மூலம் ஆடையை வளரச் செய்து அந்நியர்களின் எண்ணம் நிறைவேறா வண்ணம் பாரதத் தாயின்  துயர் நீக்குகிறாராம் காந்தி.  அப்பாடலின் இடம் பெற்ற வரிகளைக் கீழே காண்க.

“அன்னைக்கு ஆடை வளர்க”
“தீயார் துகிற் பறித்துத்
தீர்க்கின்றார் எனமானம்
மாயாமலர்க்கண்ணா
வந்துதுயர் தீர்த்திடுவாய்”

என்று பாஞ்சாலி
இசைக்க அது கேட்டுச்
சென்று மலர்க் கண்ணன்
சித்திரஞ் சேர் ஆடை
வளர்ந்திடுக என்றான்
அறம் வளர்க்க வந்தோன்

“தீயர் துகில் பறித்துத்
தீர்கின்றார் என்மானம்
மாயாமலர்க்கண்ணா
வந்து துயர் தீர்த்திடுவாய்”

என்று ரைத்திட்டாள்
இதனைச் செவியுற்றுச்
சென்று கண்ணக் காந்தி
சித்திரஞ் சேர் ஆடை
வளர்ந்திடுக என்றான்
அறம் வளர்க்க வந்தோன்

கைராட்டினத்தையும் போற்றிப்பாடும் ஒரு கவிதை நூலா என்று முதலில் எழுந்த எண்ணம்; கவிதைகள் பிறந்த காலப் பின்னணியையும், நாட்டுப்பற்றுடன் தனது சொந்த செலவில், மனைவியின் நகையை விற்று, கவிஞரின் குடும்பமே கவிதை நூலைத் தயாரித்த தகவல்களாலும், அதற்கு பிரெஞ்சு அரசாங்கம் ஏற்படுத்திய தடைகளை எண்ணும் பொழுதும், கவிஞரின் கவிதை வரிகளின் உவமை அழகிலும், கருத்துச் செறிவிலும் மனம் ஆழ்ந்து வந்தே மாதரம் என்று பாரதத் தாய்க்கும், சுதந்திர தாகம் கொண்ட அவளது அருமை மகனுக்கும் ஒருசேர தலை வணங்கும் வகையில் மாறிவிடுகிறது.  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நூல் தருவது நாட்டுப் பற்றையும், கவிதை அழகையும் ஒருங்கே அளிக்கும் சுவை விருந்து.

நன்றி:
தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation): http://www.tamilheritage.org/old/text/ebook/b_dasan/intro.html

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these