எழுதாத கதைகள

சிறிய தானியம் போன்ற மூக்கு. சின்னக் கண்கள்; சின்னத் தலை;வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல்-வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு. கருமையும் வெண்மையும் இடை கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டிறகு போர்த்த முதுகு; சிறிய தோகை,துளித்துளிக் கால்கள்.

இது சிட்டுக்குருவி பற்றிய பாரதியின் வர்ணனை. இதைப் படிக்கும் போதெல்லாம் எனக்கு,  ‘சிட்டுக் குருவி அளவில் சிறியது எனினும் அதற்கும் ஐம்புலன்கள் உண்டு’ என்ற,  சீனப்பழமொழி நினைவில் வந்து போகும். சிங்கப்பூரைப் பற்றி குறிப்பிடுகையில்  லீ க்வான் யூ, அவ்வப்போது பயன்படுத்தி வந்த பழமொழி அது. சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்திற்கும் அது பொருந்தும்

செல்கி ரோடு -சிராங்கூன் ரோடு சந்திப்பில், மூடப்பட்ட ரோச்சர் கால்வாய் மீது, தி.வெர்ஜ் மால் அருகில், இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு ஒய்யாரமாக வீற்றிருக்கிற மயிலோடு ஒப்பிட்டால் சிட்டுக் குருவி சிறியதுதான். நீலக் கழுத்தும், நீண்ட தோகையும், தகரக் குரலும், தலையில் கீரிடம் போல் கொண்டையும் குருவிக்கு இல்லைதான். ஆனால் குருவி கொடுக்கும் வியப்பும் உற்சாகமும் இன்னொரு பறவையிடம் கிடைப்பதில்லை. ‘ தெய்வமே, எனக்கு இரண்டு சிறகுகள் கொடுக்க மாட்டாயா?’ என்று சிட்டுக்குருவியைப் பார்த்துத்தான் பாரதி  ஏங்கினான் (சுதேசமித்திரன் 8.12.1915)  அரை நூற்றாண்டுக்குப் பிறகு அந்தக் குரலை பரணன், “நிலையில் மனிதரெனச் சொல்வோம்,சிட்டின் – நிலை மனவெளியில் கொள்வோம்’  எனத் தன் கவிதையில் எதிரொலித்தார்              (தமிழ் முரசு 17.3.1968)

 

இந்தியத் தமிழ் இலக்கியத்தையும் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தையும் ஒப்பிட்டுப் பேசுவதைப் போன்றதொரு அபத்தம் இல்லை. மொழிதான் ஒன்று. ஆனால் இரண்டின் இலக்கிய வரலாறும், சமூக வரலாறும், அரசியல் வரலாறும், சமூக அமைப்பும், சமகால வாழ்வும் வேறு வேறானவை. இவற்றை உள்வாங்கிக் கொள்ளாத, வெளிப்படுத்தாத எதுவும் இலக்கியமில்லை திருநெல்வேலி சந்திரவிலாசில் அமர்ந்து கொண்டு நாசிலெமாக் இருக்கிறதா எனக் கேட்பதைப் போன்ற அபத்தம்  அது.

நான் அந்த முயற்சியில் இறங்கப்போவதில்லை.

சிங்கப்பூர் இலக்கியம் என்பது, கிராஞ்சியில் செம்பாதை  எம்.ஆர்.டி.யில் ஏறி,     நியூடனில் மாறி,தேக்காவிற்கு வந்து அப்பர் டிக்சன் சாலையில் ஆப்பம் சாப்பிட்டுத் திரும்புகையில் எதிர்ப்பட்ட சீனப் பெண்ணின் ( அவள் பெயர் ஏதோ ஒரு லிம்மாகத்தானிருக்க வேண்டும்) நெஞ்சுப் பையில் தொங்கிக்கொண்டு புன்னகைக்கும் சிறு குழந்தையின் வசீகரம் பற்றி எழுதும் கவிதை அல்ல. இடங்களும் பெயர்களும் படைப்பிற்கு வனப்பூட்டும். ஆனால் அதன் இதயம் வாழ்க்கையில் துடித்துக் கொண்டிருக்கிறது.

சிங்கப்பூரிய உணர்வை உள்வாங்கிக் கொண்ட இலக்கியம். சிங்கப்பூர் வாழ்வின் அடிநாதத்தை வெளிப்படுத்தும் இலக்கியம். எதுவோ அதுவே  எனக்கு சிங்கப்பூர் இலக்கியம்

சிங்கப்பூரிய உணர்வு (Singaporeaness) என்றால் என்ன? சிங்கப்பூர் வாழ்வின் அடிநாதங்கள் எவை?

வீழ்வேன் என்று நினைத்தாயோ?    

ஆகஸ்ட் ஒன்பது 1965. பகல் பத்துமணி. வானொலியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த நிகழ்ச்சிகள் திடீரென ஒரு கணம் நிறுத்தப்பட்டன. அடுத்து ஒலித்தது அறிவிப்பாளர் குரல் அல்ல. வரலாற்றின் குரல். ‘தற்சார்ந்தும், சுதந்திரமாகவும் வாழ மனிதருக்குள்ள பிரிக்க முடியாத உரிமையினால் இன்று முதல் மலேசியாவிலிருந்து பிரிந்து தனித்த இறையாண்மை கொண்ட, சுதந்திரமான, ஜனநாயகக் குடியரசாக மலர்கிறது சிங்கப்பூர்’ என்ற லீ குவான் யூவின் அறிவிப்பு ஒலித்தது.

அறிவிப்பைக் கேட்ட தேசம் திடுக்கிட்டது.  திகைப்பில்  விக்கித்துப் போய் நின்றது. வெடிகள், வேட்டுக்கள் இல்லை. வாணவேடிக்கைக் கொண்டாட்டங்கள் இல்லை. விருந்து கேளிக்கை ஏதும் இல்லை. எதிர்காலம் என்ன என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்து நின்றது. “சிங்கப்பூரும் மலேசியக் கூட்டமைப்பும் ஒரே பொருளாதாரமாக இணைக்கப்பட்டால்தான் சிங்கப்பூர் பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்கள் செய்வது சாத்தியம்” என டாக்டர் கோ கெங் ஸ்வீ மீண்டும் மீண்டும் கூறி வந்திருந்தார். பொருளாதர நோக்கில் மட்டுமல்ல, மலேயாவுடனான இணைப்பு “வரலாற்றுத் தேவை” என ராஜரத்தினம் பேசியிருந்தார்

ஆனால் இனி இணைப்பு சாத்தியமில்லை. பேசியாயிற்று; கடிதங்கள் பரிமாறிக் கொண்டாயிற்று; அமைச்சர்கள் பத்துப் பேரும் கையெழுத்திட்டுப் பிரிந்து வந்தாயிற்று;பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டாயிற்று. இனி இணைப்பு சாத்தியமில்லை. சுயமரியாதையை விட்டுக் கொடுத்து மண்டியிட்டாலொழிய இணைப்பு சாத்தியமில்லை.

அதுதான் அந்த ஆகஸ்ட் 9ல் இருந்த மனநிலை. ஆனால் வீழ்ந்து விடவில்லை சிங்கப்பூர். உலகப் பரப்பில் ஒருவராலும் கவனிக்கப்படாத ஒரு சிறு புள்ளியாய், பெருங்கடல் நடுவே ஒரு மணல்திட்டாய் அதன் கதை முடிந்து போகவில்லை. சீனம் போல் புலியில்லை, இந்தியா போல் யானை இல்லை, அமெரிக்கா போல்  கழுகு இல்லை, என்றாலும் உலகால் புறந்தள்ளமுடியாத ஒரு சக்தியாகத் திகழ்கிறது இந்தச் சிட்டுக்குருவி.

ஒரு வரியில் சொன்னால் சிங்கப்பூரிய உணர்வு (Singaporeaness)  என்பது ‘வீழ்வேன் என்று நினைத்தாயோ?’

இந்த உணர்வை மூத்த சிங்கப்பூர் எழுத்தாளர்களின் வாழ்க்கையில் படிக்கிறேன். இளம் வயதிலே அன்னை இறந்து போனார். அடுத்தடுத்து மூன்று தம்பிகள் இறந்து போனார்கள். இவராவது பிழைத்திருக்கட்டும் என்று இவருடைய தந்தை இக்பாலை சிங்கப்பூருக்கு அழைத்து வந்தார். 11 வயதிலே சிங்கப்பூருக்கு வந்தார் இக்பால். உமறுப் புலவர் பள்ளியிலே சேர்ந்தார். ஆனால் வாழ்க்கைச் சூழல் காரணமாக படிப்பைத் தொடரமுடியவில்லை. ஜீவிப்பதற்காகச் சிறு சிறு வேலைகள் செய்ய வேண்டிய கட்டாயம். திருமணமாகி ஒரு குழந்தையும் பிறந்த பிறகு 23வது வயதிலே இரவுப் பள்ளியிலே சேர்ந்து படித்தார். 27ஆம் வயதிலே ஓ லெவல் முடித்தார். அந்தக் கல்வித் தகுதி இல்லாமலே அவர் வாழ்வாதரத்தை அமைத்துக் கொண்டிருக்க முடியும். ஆனாலும் படித்தார். காரணம் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்ற உணர்வு. நெருப்பு வெப்பத்தை மட்டுமல்ல, வெளிச்சத்தையும் கொடுப்பது போல, இத்தனை வாழ்வின் நெருக்கடிக்கிடையிலும் இலக்கியம் அவரை ஈர்த்தது. வயிறு மட்டுமா வாழ்க்கை? இலக்கணம் கற்றார். எழுதத் தொடங்கினார். அவர் உட்காரச் சொன்ன இடத்தில் ஓடி வந்து அமர்ந்து கொண்டது தமிழ். எதுகையும் மோனையும் அவர் இடக்கை வலக்கை போலாயிற்று. ஆனால் காலமறிந்து கைகளை மடக்கிக் கொண்டார். இலக்கணம் துறந்தார். 16 வயதிலே கவிதை எழுதத் தொடங்கினார்  இன்று அவர் வாங்காத பரிசுகளே இல்லை. இதற்குப் பின்னால் இருப்பது இயற்கையைக் காதலிக்கிற, கவிமனம் மட்டும்தானா? இல்லை எனக்கு இக்பாலை உந்துவது, வீழ்வேன் என்று நினைத்தாயோ என்ற வீறு என்று தோன்றுகிறது

இக்பாலின் கதை ஒரு தனிமனிதனின் கதை அல்ல. ஒரு தலைமுறையின் கதை . அவர் தலைமுறையைச் சேர்ந்த பலரது கதையும் இதுதான். இன்னொரு உதாரணம் புதுமைதாசன் என்ற கிருஷ்ணன். பலசரக்குக் கடையில் வாழ்வைத் தொடங்கியவர், ஒலிபரப்புத் துறையில் ஒப்பார் இல்லாத முத்திரை பதித்து ஓய்வு பெற்றார். காற்றில் சுவடு பதிக்க முடியும் என்பதற்கான கண்கூடான சாட்சி அவர். பரணன், இளங்கண்ணன், அமலதாசன், என அந்தத் தலைமுறை மொத்தத்தையும் உந்திய விசை இந்த வீழ்வேன் என்று நினைத்தாயோ என்ற சிங்கப்பூர் உணர்வுதான்,

சரி, இந்த சிங்கப்பூர் தன்மை இவர்களது எழுத்துக்களில் எத்தனை தூரம் பிரதிபலிக்கிறது? இன்று,வாழ்க்கை உதைத்து சிங்கப்பூரில் வந்து விழும் இளைஞனுக்கு சாலைப் பணியாளனுக்கு, கட்டிடத் தொழிலாளிக்கு, வீட்டுப் பணிப்பெண்ணுக்கு, இவர்களது எழுத்துக்கள் எந்த அளவிற்கு தன்னம்பிக்கை தரும், மன எழுட்சி தரும்? “வாய்யா, வா! இது வாய்ப்புக்களின் வாசல். கலங்காதே, உன்னை விட மோசமான நிலையில் எங்கள் வாழ்வு தொடங்கியது.என்றாலும் இன்று நன்றாகவே இருக்கிறோம்” என்ற நம்பிக்கையை இலக்கியம் வாசிக்கும் வந்தேறி இளைஞனுக்கு அவை தருகின்றனவா? நிறைவளிக்கக் கூடிய விடை  என் வாசிப்பில் எனக்குக் கிட்டவில்லை.

இவர்கள் வாழ்வே ஒரு இலக்கியம். ஆனால் இவர்கள் படைப்புக்களில் இவர்களது வாழ்க்கை இல்லை. இயற்கையின் மீது இக்பால் கொண்டிருக்கும் காதல், அக உலகின் குரல்கள் அவரது கவிதை வெளியை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. உலக இலக்கியத்தை உள்ளங்கைக்குள் கொண்டு தருகிற முனைப்பில் புதுமைதாசன் பேனா இயங்குகிறது. மொழி என்னும் மோகினி சந்தச் சலங்கை கட்டிக் கொண்டு பரணனின் பாடல்களில் சதிர் ஆடுகிறாள். கண்ணபிரான், கோவிந்தசாமி இவர்களது  வாழ்க்கை இன்ன பிறரைப் போல, போராடி ஜெயித்த வாழ்க்கை அல்ல. அறிவாற்றலால் சுவீகரித்துக் கொண்ட வாழ்க்கை. அவர் படைப்புக்கள் சிந்தனையைக் கிளறுகின்றன. ஆனால் நம்பிக்கை நாற்றுகளை நட்டுப் பயிர் செய்வதில்லை. அகிலனின் பாராட்டைப் பெற்ற எழுத்தாளர் பொன். சுந்தரராசுவின் வாழ்வனுபவங்கள் சராசரிக்கு அப்பாற்பட்டவை. இந்தியாவில் வாழும் எந்தத் தமிழ் எழுத்தாளனுக்கும், ஏன் சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்குமே  எளிதில் வாய்க்காதவை.என்றாலும் அவர்  இன்னொரு இந்தியத் தமிழ் எழுத்தாளராகவே இருப்பது எனத் தேர்ந்து கொண்டார். சிங்கப்பூர் வாழ்வின் இருண்ட பக்கங்களை துணிச்சலாக வெளிச்சம் போட்ட்வர் இளங்கோவன். என்றாலும் அவை அதிக பட்சம் சினமூட்டுபவையே தவிர நம்பிக்கை தருபவை அல்ல. புதுமைப்பித்தனின் நம்பிக்கை வறட்சியில் எள்ளல் இருந்தது. இளங்கோவனின் நம்பிக்கை வறடசி ஏளனமாய் முடிந்தது

மரபிலிருந்து விடுதலை

சிங்கப்பூரின் வெற்றியின் (அல்லது வியத்தகு மாற்றத்தின்) வேர்கள் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்ற வீறில் மாத்திரமல்ல, மரபான சிந்தனைகளிலிருந்து விடுபடல், (Freedom from orthodoxy) புதியன விரும்பும் புத்தாக்க முயற்சிகள், தொழில்நுட்பத் தேர்ச்சி ஆகியவற்றிலும் பரவி நிற்கின்றன. குடியரசின் இரண்டாம் இருபத்தி ஐந்து ஆண்டுகளில் இதைத் தூக்கலாகப் பார்க்கலாம்.

சிங்கப்பூர் குடியரசான போது பொருளியல் ரீதியாக இரு முடிவுகளை எடுத்தது. இரண்டும் வழக்கமான பொருளாதாரச் சிந்தனையிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. 1. இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு மாற்றாக உள்ளுரிலேயே பொருள்களைத் தயாரிப்பதற்கு பதிலாக, ஏற்றுமதிக்கு வழிகோலும் தயாரிப்பில் கவனம் செலுத்துவது (To shift away from import substitution in favor of export- led industrialization)  2)  பன்னாட்டு நிறுவனங்களைக் கவர்ந்திழுத்து அவற்றுக்கு ஊக்கமளித்து தொழில்துறை வளர்ச்சியை எட்டுவதற்கு அவற்றை சாதனங்களாகப் பயன்படுத்திக் கொள்வது. (To attract global multinational corporations as vehicles to achieve  industrial growth) அன்றையத் தேதியில் இரண்டும் துணிச்சலான முடிவுகள் உலகின் பார்வையில் அபாயகரமானவை. ஏனெனில் அன்று உலகமயமாதல் இல்லை. ஒரு நாடு தன்னுடைய அன்னிய செலாவணி இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதே பாதுகாப்பானது என்ற எண்ணம் நிலவிய காலம் அது.

அதே போன்ற இன்னொரு துணிச்சலான முடிவு கல்வியில் ஆங்கிலத்திற்கு முதலிடம். ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட துரைமார்கள். அவர்கள் மொழி ஆங்கிலம். வெள்ளைக்காரனே போன பின்பு அவன் மொழி மட்டும் நமக்கெதற்கு என்ற மனோபாவம் இந்தியா விடுதலை பெற்ற ஆண்டுகளில் இந்தியாவில் நிலவியது.

சிங்கப்பூர் இலக்கியம் மரபார்ந்த சிந்தனைகளிலிருந்து எளிதில் விடுபட்டு விடவில்லை. ‘மரபுக்கு கேடு செய்தால் மாறாத சூடு வைக்க’ கவிதை உலகின் காவல்துறையினர் சூட்டுக் கோலோடு காத்திருந்தார்கள் தேமாங்காய் புளிமாங்காய் கூவிளங்காய்/ தெரிந்து கொண்டு தளை அசை சீர் எண்ணிக் கொண்டு/ தாமாகச் சொற்களினைப் பொறுக்கிப் போட்டுத்/  தயங்கி வரும் எதுகையோடு மோனை சேர்த்து/ பூ மீது கவிதையெனப் புலம்பி நின்றால்/புலவரெனத் தம்பட்டம் அடித்துக் கொண்டால்/ஏமாளி இவரைப் போலே யாரே உள்ளார்/இவருக்கும் கவிதைக்கும் தொடர்பே இல்லை’ என்ற தெளிவு கொண்ட இக்பால் போன்ற கவிஞர்களின்  ‘உள்நாட்டுப் புரட்சியாலும்’ தமிழ் முரசின் ஊக்கத்தாலும் புதுக்கவிதைகள் 90களில் பூக்கத் தொடங்கின. இளங்கண்ணன், சே.வே.சண்முகம் போன்றவர்களின், இரண்டொரு கதைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தென்பட்ட மரபிலிருந்து விலகிய சிந்தனைகளைத் தவிர, சிங்கப்பூர் சிறுகதைகள் இறுக்கமாகவே இருந்தன.சமூக அறத்தைக் காப்பாற்றும் பொறுப்பை அரசாங்கத்தோடு சேர்த்து கதாசிரியர்களும் கையில் எடுத்துக் கொண்டிருந்தார்கள்  பெரும்பாலான கதைகளின் வடிவமோ உருளைக் கிழங்கு திணிக்கப்பட்ட சாக்குப் பைபோல் சம்பவங்களால் கனத்துத் தொங்கின.

 

 

புதிய காற்று

65ல் எடுக்கப்பட்ட முடிவுகள் 90கள் வாக்கில் பலன் கொடுக்கத் தொடங்கின. பொருளாதார ரீதியில் நிமிர்ந்து விட்டது  நாடு. என்றாலும் பஃபல்லோ தெருவில் விற்கும் முருங்கைக்காய்கள் மட்டுமல்ல, ஆசிரியர்கள், கணினித் துறை வல்லுநர்கள் எனப் பல அறிவுத்துறைப் பணியாளர்கள் இந்தியாவிலிருந்தும் பிறபகுதிகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டார்கள்.

இவர்கள் தங்கள் மூட்டைகளோடு தங்கள் வாசிப்பையும் கொண்டு வந்தார்கள். எல்லோரும் இலக்கியப் பிரக்ஞையோடு சாங்கியில் வந்து இறங்கினார்கள் என்று சொல்வதற்கில்லை. வெகுஜன வாசிப்பு மட்டுமே பழக்கமானவர்களும் இருந்தார்கள். ஆனால் அங்கு வெகுஜனப் பத்திரிகைகள் சிங்கை எழுத்துக்களை விடவும் ‘முற்போக்கான’ ( Liberal) எழுத்துக்களுக்கு இடமளித்திருந்தன. தமிழ்ப் பெண்களோடு சேர்த்து சீனப் பெண்களின் கற்பையும் காக்கும் பொறுப்பில் சிங்கை எழுத்துக்கள் முனைந்திருந்த போது, அதற்கும் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே, 1966லேயே, ‘களங்கப்பட்ட’ கல்லூரி மாணவி தலையில் தண்ணீரைக் கொட்டி, ஆனந்த விகடனில் அக்னி பிரவேசம் செய்திருந்தார் ஜெயகாந்தன்.

மரபான சிந்தனையிலிருந்து விடுபடல் என்ற சிங்கப்பூர் உணர்வை இவர்கள் எழுத்துலகிற்குள் கொண்டு வந்தார்கள். இந்தியாவிலிருந்து வந்தவர்கள் மட்டுமல்ல, இலங்கையிலிருந்து பெயர்ந்தவர்கள், மலேசியாவிலிருந்து வந்தவர்கள் எனப் புதியவர்கள் புதிய சாளரங்களைத் திறந்தார்கள். சிங்கை எழுத்தில் அநேகமாக இல்லை என்றாகிவிட்ட அங்கதத்தையும் நகைச்சுவையையும் இந்திரஜித் அறிமுகப்படுத்தினார். அதே நேரத்தில் லதா பூடகமான சமூக விமர்சனங்களையும், அடையாளம் தேடும் பெண்களையும் படைப்புலகிற்குள் கொண்டு வந்தார்.

நெற்றித் திலகம் போல இந்தியப் பெண்களோடு ஒட்டிக் கொண்டு வந்துவிட்ட வாசிப்புப் பழக்கத்திற்கு சிங்கப்பூர் நூலகங்கள் பொலிவூட்டின. வாசிப்புப் பழக்கம் வலுவடைந்ததும், ஆசை உந்த, வாசகர்கள் எழுத்தாளர்கள் ஆனார்கள். முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் போல அவர்கள் பிரசுர வாய்ப்புக்களுக்காக உள்ளூர் தினசரியை மட்டும் காத்திருக்கவில்லை. இவர்கள் விரல் நுனியில் இணையம் இருந்தது. இணையத்தில் தமிழ் இதழ்கள்  அரும்பியிருந்தன. வலைப்பூக்கள் என்று சொந்தமாக தோட்டம் போட்டுக் கொள்ள மின்வெளியில் இடம் இருந்தது.சொந்த மண்ணின் மொழியின் சுகம் இழந்து, தனிமையால் தின்னப்பட்டுக் கொண்டிருந்த யாரோ ஒருவன் உலகத்தின் ஏதோ ஒரு நகரிலிருந்து, இவர்களது படைப்புக்களுக்கு பின்னூட்டம் போடக் காத்திருந்தான். சிங்கப்பூரர்களுக்காக மட்டுமின்றி இவர்கள் அலைகடலின் கரைகளுக்கு அப்பால் இருப்பவர்களுக்காகவும் எழுதினார்கள். அவர்களை சிங்கப்பூர் எழுத்தாளர்கள் என்பதை விட சிங்கப்பூரில் வதியும் தமிழ் எழுத்தாளர்கள் ( (Not Singaporean Tamil writers, but writers residing in Singapore) என்று வகைப்படுத்தலாம். காரணம் அவர்களுக்கு சிங்கப்பூர் வாழ்வின் அடிநாதங்கள் அதிகம் பரிச்சயமாகியிருக்கவில்லை

அறியப்படாத அடிநாதங்கள்

சிங்கப்பூர் வாழ்வின் அடிநாதங்கள் எவை?

இடம் பெயர்தல் (இதை நீங்கள் Re-location என்று எடுத்துக் கொண்டாலும் சரி,  dislocation என்று எடுத்துக் கொண்டாலும் சரி). சிங்கப்பூரின் ஒரு தலைமுறைத் தமிழர்கள் தமிழகத்திலிருந்தோ, மலேயாவிலிருந்தோ, இலங்கையிலிருந்தோ இடம் பெயர்ந்து வந்தவர்கள் (சீனர்களும் கூட தாயகத்திலிருந்து பெயர்ந்தவர்கள்தான்) சிங்கப்பூரிலேயே பிறந்த இளங்கண்ணன் போன்றவர்களும் கூட காம்போங்கிலிருது வீ.வ.க. வீடுகளுக்குப் பெயர்ந்தவர்கள்தான். வீ.வ.க. வீடுகளில் குடியேறியவர்கள் பின்னர் சொந்த வீடு வாங்கிக் கொண்டு ‘காண்டோ’விற்குப் பெயர்ந்தவர்கள்தான். பின்னர் வந்தவர்களில் பலர் குடி பெயர்வு மட்டுமல்ல, பணி நிமித்தம் அலுவலகங்கள் மாறும் இடப் பெயர்வையும் எதிர் கொண்டவர்கள்தான்.

இடப் பெயர்வு புறப்பெயர்வை மட்டுமல்ல, அக வெளியிலும் பெயர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதனைச் சமன் செய்து கொள்வது எளிதல்ல. அலைகள் மோதும் படகில் -கட்டுமரம் என்று சொல்ல வேண்டுமோ?- நின்று கொண்டு பயணிப்பதைப் போன்ற சவால். புறவாழ்வின் வசதிகள் இதனை உணரச் செய்யாது மட்டுப்படுத்தலாம்.  ஆனால் அகற்றிவிடாது.

இலங்கையர்களும் இது போன்ற இடப் பெயர்வை எதிர்கொண்டார்கள். பொருளியல் காரணங்களுக்காக மட்டும் அல்ல. அரசியல் நெருக்கடிகள் அவர்களைப் புலம் பெயர நிர்பந்தித்தன.பனங்காட்டிலிருந்து பனிப்புலங்களுக்கு அவர்கள் பெயர்ந்தார்கள். சொந்த மொழி பேசும் நாடுகளுக்கு மட்டும் இடம்பெயரும் நல்லூழ் பலருக்கு வாய்க்கவில்லை. இந்தப் பெயர்வை அவர்கள் இலக்கியத்தில் சிறப்பாகப் பதிந்திருக்கிறார்கள்

சிங்கப்பூரில் இடப்பெயர்வைப் பற்றி சிறப்பாக எழுதியவர் இளங்கண்ணன். அவரது நினைவுகளின் கோலங்கள் என்ற நெடுங்கதை, காம்போங்கிலிருந்து இடம் பெயர்கிறவர்களது மனநிலையை நன்கு பதிவு செய்திருக்கிறது. ஆனால் அது அபூர்வ உதாரணம்.

சிங்கப்பூர் வாழ்வின் இன்னொ ரு  அடையாளம், அடையாளமற்றுப் போதல். உலகமயமாக்கலின் ஒரு முக்கியமான அம்சம் உள்ளூர் அடையாளங்களை அர்த்தமற்றுப் போகச் செய்தல் (To make local culture redundant) என்று ஒரு வாதம் உண்டு. சுப்ரபாதம் ஒலிக்க எழுந்து,  லீவைஸ் ஜீன்ஸ் அணிந்து கொண்டு, கொரிய போனில் தமிழும் இல்லாத ஆங்கிலமும் இல்லாத ஒரு மொழியில் எமோஜிகளோடு செய்தி பகிர்ந்து கொண்டு, அரபுத் தெருவில் சீன உணவகத்தில் பிலிபைன்ஸ் நண்பனோடு  டம்ளிங்க் கொறித்துக் கொண்டு  கார்ல்ஸ் பெர்க் பீர் பருகியபடி ஹாலிவுட் படத்தையோ, ஆங்கிலப் புத்தகத்தையோ விமர்சனம் செய்யும் வாழ்க்கை சிங்கப்பூர் இளைஞர்களுக்கு அவ்வளவு அந்நியமானதல்ல. சீனருக்குப் பிறந்து ஜப்பானியார்களிடம் பெற்றோரைப் பறிகொடுத்து தமிழ்க் குடும்பத்தில் வளர்ந்தவர்கள் சிங்கப்பூரில் உண்டு. மலாய்ப் பெண்களை மணந்து கொள்ளும் தமிழ் இளைஞர்கள் உண்டு. பெர்னாக்கர்களும் யூரேசியர்களும் உண்டு. பங்களா தேசியா, பட்டுக்கோட்டையா எனக் கண்டுணர முடியாத பணிப் பெண்கள் உண்டு. பொரிக்கும் வெயிலில் சாலையோர மர நிழலில் சாப்பாட்டுப் பொட்டலத்தைப் பிரிக்கும் சாலைப் பணியாளன் இந்தோனீசியனா, இந்தியனா என அடையாளம் காண முடியாமல் போவதும் உண்டு. நாற்பத்தி ஐந்தாம் மாடியிலிருந்து நாற்பத்தி எட்டாம் மாடிக்கு இரும்புத் துண்டு ஏந்திச் செல்பவன் எந்த தேசம் எனத் தெரியாது. நாடாளுமன்றத்தில் தமிழில் பேசும் மலையாள எம்.பியின் மனைவி சீனராக இருக்கலாம்

பாரம்பரிய அடையாளங்களை அரசியல் காரணங்களுக்காகவோ, அல்லது பண்டிகைக் கொண்டாட்டங்களுக்காகவோ பேணுகிற சமூகமாக இருக்கிறது சிங்கப்பூர்.

இதை எத்தனை கதைகள் பிரதிபலிக்கின்றன? புதிய எழுத்தாளர்களோ, மூத்த எழுத்தாளர்களோ ஏன் இதைத் தொட்டு எழுதவில்லை என்பதற்கான விடைகளை இப்போதும் தேடிக் கொண்டிருக்கிறேன்

சிராங்கூன் தெரு கடைக்களுக்குப் பின்னால், கடைகளின் உரிமையாளர்களின் வாழ்க்கைக்குப் பின் கதைகள் ஒளிந்திருக்கின்றன. வியாபாரியைப் போல் வெற்றியை ருசிப்பவரும் அவமானங்களைத் தின்பவரும் சமரசங்களை விழுங்குபவரும் வேறெவரும் இல்லை. நெருக்கடிகளிலும் நிதானத்தை இழக்காத பொறுமையும் நாணயத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் தவிப்பும் அவர்களிடத்தே குடி கொண்டிருக்கின்றன.  மரபார்ந்த சிந்தனையிலிருந்து விலகி, சிங்கப்பூரைப் போல, புதியன விரும்பி புத்தாக்க முயற்சிகளில் முனைந்து அதன் விளைவுகளை எதிர்கொண்டவர்கள் அவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களைப் பற்றி அதிகம் எழுதப்படவில்லை

சாங்கியில் ஒரு காலத்தில் ரப்பர் விளைந்தது. பின் சர்க்கரை வள்ளித் தோட்டமாக மாறியது என்று எம்.கே.நாராயணன் விரிவாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். நகர்மயமாதல் எதை அல்லது யாரைத் தின்று விஸ்வரூபம் எடுத்தது என்பதற்குப் பின்னால் எழுதுவதற்கு பொறிகள் புதைந்திருக்கின்றன

இருப்பதைப்பற்றி பேசாமல் இல்லாததைப் பட்டியல் போடுகிறேன் என்ற சலிப்பு வேண்டாம். சொல்லாத சொற்களும் எழுதப்படாத கதைகளும் உங்களைச் சுற்றி இரைந்து கிடக்கின்றன என்பதைச் சுட்டுவதே நோக்கம். இவற்றை எழுதத் தலைப்படும் போது சிங்கப்பூர் இலக்கியம் தனித்த அடையாளம் பெறும்

நம்பிக்கையும் கவலையும்

இன்று சிங்கப்பூரின் புது எழுத்துக்கள்  ஒரு சேர  நம்பிக்கையும் கவலையும் தருகின்றன. நம்பிக்கை உருளைக் கிழங்கு மூட்டைகள் காணாமல் போய்விட்டன, வடிவ உணர்வு மேலோங்கி வருகிறது, படைப்பின் மொழியைக் கூர் தீட்டும் முனைப்பு வலுப்பெறுகிறது என்பதில் கால் கொண்டு நிற்கிறது.  கவலைக்குக் காரணம் இன்றைய சிங்கப்பூர் படைப்ப்புலகில் தமிழகச் சிறுபத்திரிகைகளின் நிழல் கவியத் தொடங்கியிருக்கிறதோ என்பது. தனக்குப் பரிச்சயமில்லாத மொழி, நடை, தனது வாழ்க்கையை பிரதிபலிக்காத கதை, இவற்றை எதிர்கொள்ள நேரும் போது வாசகன் வாசிப்பிலிருந்து அன்னியப்பட்டுப் போவான். அல்லது இலக்கியம் என்பது மேட்டிமைத்தனமாக (Elitism) மாறிப் போகும். அதன் பின் அந்த வேதாளத்தை மரத்திலிருந்து இறக்குவது எளிதல்ல.

மலிவான வெகுஜனக் கதைகளுக்கும், மேட்டிமை கதைகளுக்கும் இடைப்பட்ட ஒரு மொழியைக் கண்டுபிடிக்க, வலுப்படுத்த வேண்டிய. சரித்திர தருணத்தில் நிற்கிறோம். நீங்கள் மட்டுமல்ல, தமிழக தமிழ் எழுத்துலகிலும்தான்

தமிழகம் -சிங்கை என இரு நிலங்களிலும் உலவியவன் என்ற அனுபவத்தில் ஒன்றை என்னால் நிச்சயமாக சொல்ல முடியும். தமிழக எழுத்தாளர்களிடமிருந்து, குறிப்பாக இலக்கியச் சிற்றேடுகளிடமிருந்து, நீங்கள் கற்க ஏதுமில்லை. அவர்களையும் அவற்றையும் வாசியுங்கள், ஒரு வாசிப்பனுபவத்திற்காக. ஆனால் வாசிப்பது வேறு கற்பது வேறு. உங்களின் வாழ்வையையும் கதைகளையும் மொழியையும் அவர்கள் அறியார். வேடிக்கை பார்க்க வந்தவனுக்கு சத்தியம் புரியாது என்பது பாரதியின் மொழி.

உங்கள் கதைகள், உங்கள் மொழி இவற்றை நீங்கள்தான் தேடிக்காண வேண்டும். நிலவைப் போல் இரவல் ஒளியில் பிரகாசித்தால் அக்கரையில் கைதட்டல் கிடைக்கலாம். விருதுகள் வரலாம். ஆனால் சிங்கையில் வாசகனை இழந்து விடுவீர்கள்

என்ன செய்யப் போகிறீர்கள்?

About the Author

maalan

Maalan, born in 1950 in Srivilliputhur, Tamil Nadu, emerged as a literary figure with a penchant for poetry. At the age of 16, he made his debut in the literary world through both poetry and prose. From 1970 to 1985, he contributed numerous short stories and poems in literary journals throughout Tamil Nadu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these