மெளனிக்க மறுத்த குரல்கள்

உச்சபட்சமான கருத்து சுதந்திரத்திற்கான இடம் : வெற்றுத் தாள்!

இது ஓர் ஆங்கிலச் சொலவம். ஆனால் அதிகாரம் அஞ்சியதெல்லாம் வார்த்தைகளைக் கண்டுதான்.  சுண்டைக்காய்குடியரசுகளிலிருந்து, சூரியன் மறையாத பிரிட்டீஷ் பேரரசு வரை இதுதான் வரலாறு.

பிரிட்டீஷ் பேரரசு, 1911 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி தலைமைச்செயலாளரால் வெளியிடப்பட்ட ஓரு நீதித்துறை ஆணை மூலம்  (Order No. 1588, Judicial. Dated 11th October 1911)  )  பாரதியின்  கனவு, ஆறில் ஒரு பங்கு என்ற இரண்டு நூல்களைத் தடை செய்தது.

“Whereas the two Tamil pamphlets specified below, printed and published at Pondicherry contain matter, which, in the opinion of the Governor in Council. has a tendency to excite disaffection towards the Government and is therefore of the nature described in section 1, sub-section (1) of the Indian Press Act 1910, the Governor in Council, in exercise of the powers cỏnferred by Section 12, subsection (1), of the said Act, declares that all copies of the publications are forfeited to His Majesty:

‘Kanavu’, a poem and other songs By C. Subramanya Bharathi

”Ariloru pangu’, a short story By C. Subaramalya Bharathi

இரண்டு நூல்களுமே புதுச்சேரியில் வாழ்ந்த காலத்தில்,  பாரதியால், வெளியிடப்பட்டவை. கனவு என்பது பாரதியின் சுயசரிதை 1910 ஆம் ஆண்டு நவம்பரில் வெளியானது ஆறில் ஒரு பங்கை. 1910 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம்,  , ‘ஆறில் ஒரு பங்கு -ஒரு சிறிய கதை’ என்ற சிறு பிரசுரமாக மூன்றணா விலையில் பாரதி  வெளியிட்டார்.

அரசின் மீது வெறுப்பை  ஏற்படுத்தும் போக்கை (has a tendency to excite disaffection towards the Government) படைப்புக்கள் கொண்டிருந்தது தடைக்கான காரணமாக அரசின் ஆணையில் குறிபிடப்படுகிறது. ஆறில் ஒரு பங்கு காதல் கதை. கனவு சுய சரிதை  அவற்றில் அரசின் மீது வெறுப்பேற்படும்படி என்ன எழுதிவிட முடியும்?

இந்தக் கேள்விகான விடையை அறிந்து கொள்ள அவை தடை விதிக்கப்பட்ட சூழலுக்கு நாம் பயணிக்க வேண்டும்

1911ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி மணியாச்சி ரயில் நிலையத்தில், திருநெல்வேலி மாவட்டப் பொறுப்பு ஆட்சியராகப் பணியாற்றிய, ஆஷ்  துரை என்று தமிழகத்தில் வர்ணிக்கப்படும்,  இராபர்ட் வில்லியம் டி’எஸ்கோர் ஆஷ், வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  அதே நாளில், சில நிமிடங்களுக்குப் பின்  வாஞ்சிநாதன் தன்னையும் சுட்டுக் கொண்டு இறந்தார்.

இந்தக் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் பாரதி. வாஞ்சிநாதனுடைய வீட்டைச் சோதனையிட்ட போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் பாரதியின்   இந்த இரு நூல்களும்  அவரது பத்திரிகைகளின் பிரதிகளும் இருந்தன.

இதனடிப்படையில் பாரதியின் நூலகளுக்கான தடையை ஆஷ் கொலையோடு தொடர்புபடுத்தி பலர் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவை ‘இப்படி இருந்திருக்கலாம்’ என்ற சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் அமைந்தவை. அவற்றுக்கான ஆவண மூலங்கள் இல்லை.

ஆவணங்களின் அடிப்படையில் பார்க்கும் போது வேறு ஒரு கோணம் கிடைக்கிறது. அது என்ன?

ஆஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 14 பேர். வழக்கை  விசாரித்த  திருநெல்வேலி துணைமண்டல முதல் வகுப்பு நடுவர் (சப் டிவிஷனல்  பர்ஸ்ட்கிளாஸ் மாஜிஸ்ட்ரேட்)   குற்றம் சாட்டப்பட்ட 14 பேரின் குற்றத்தை உறுதி செய்து வழக்கை விசாரணைக்கும் தண்டனைக்கும் மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தார். ‘திருநெல்வேலிச் சதி வழக்கு’ எனப் பெயரிடப்பட்ட இந்த வழக்கை விசாரிக்க ஒரு சிறப்பு நீதி மன்றம் அமைக்கப்பட்டது.

சிறப்பு நீதி மன்றம் வழக்கை 1911ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி விசாரணைக்கு ஏற்றது. ஐந்து மாதங்களுக்குப் பிறகு, 1912ஆம் ஆண்டு பிப்ரவரியில் தீர்ப்பு வழங்கியது. ஆனால்  வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் முன்னரே பாரதியின் நூல்களைத் தடை செய்வதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுவிட்டன.  வழக்கு விசாரணை தொடங்குவதற்கு மூன்று தினங்களுக்கு முன் , அரசின் கீழ்நிலைச் செயலர் (அண்டர் செகரட்டரி) ஸ்லேட்டர்,  கனவு, ஆறில் ஒரு பங்கு இவற்றின் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பகுதிகளை, மாநிலத்தின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ். சிவசாமி ஐயருக்கு அனுப்பி இவற்றின் அடிப்படையில், நூல்களைத் தடை செய்ய இயலுமா எனக் கருத்துக் கேட்டார்  (Confidential Official Memorandum No 4188 Judicial dated 8.9.1911. இந்த ஆவணத்தை ஆவணக் காப்பகத்தில் காணலாம்)

இருவாரங்களுக்குப் பிறகு, 1911ஆம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று சிவசாமி அய்யர் இந்தியப் பத்திரிகைச் சட்டத்தின் 12 ஆம் பிரிவின் கீழ் இவற்றின் மீது தடை விதிக்க முடியும் எனக் கருத்துத் தெரிவித்ததின் அடிப்படையில்  கனவு, ஆறில் ஒரு பங்கு இரண்டும் தடை செய்யப்பட்டன.

ஆறில் ஒரு பங்கு ஒரு காதல் கதை. கனவு பாரதியின் சுய சரிதை. இவற்றில் அரசுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும்படி என்ன இருந்து விட முடியும்?

‘நாயைத் தூக்கில் போடுவதானாலும் சட்டப்படியே செய்வோம்’ என மார்தட்டிக் கொண்ட பிரிட்டீஷ் இதற்கான காரணங்களைத் தடை ஆணையின் இணைப்பில் (Enclosure to official memorandum No. 4188-1 Judicial dated 8th September 1911) தெரிவித்திருக்கிறது.  அரசின் மீது வெறுப்பைத் தூண்டும் பகுதியாக ” “நாம் பள்ளர் பறையருக்குச் செய்ததை யெல்லாம் நமக்கு இப்போது அன்னியர்கள் செய்கிறார்கள்…  …நாம் நமக்குள்ளேயே ஒரு பகுதியாரை நீசர்களென்று பாவித்தோம். இப்போது நம்மெல்லோரையுமே உலகத்தார் மற்றெல்லா நாட்டினரைக் காட்டிலும் இழிந்த நீசர்களாகக் கருதுகிறார்கள்.” என்று ஆறில் ஒரு பங்கில் காணும் வரிகளை அது குறிப்பிடுகிறது.

இதில் அரசின் மீதான விமர்சன வார்த்தைகள் ஏதும் இல்லை. சமூக விமர்சனம் இருக்கிறது. அதுவும் சுய விமர்சனமாக இருக்கிறது. இந்தப் பத்தியில் இதை விடக் கடுமையான வார்த்தைகள், சனாதான இந்துக்கள் பாரதி மீது கோபம் கொள்ளச் செய்யும்   வார்த்தைகள், இருக்கின்றன.  ”  நமது சிருங்கேரி சங்கராசாரியாரும், வானமாமலை ஜீயர் ஸ்வாமிகளும் நட்டால், திரான்ஸ்வால் தேசங்களுக்குப் போவார்களானால், ஊருக்கு வெளியே சேரிகளில் வாசம் செய்ய வேண்டும் சாதாரண மனிதர்கள் நடக்கும் ரஸ்தாக்களில் நடக்கக் கூடாது. பிரத்தியேகமாக, விலகி நடக்க வேண்டும். பல்லக்குகள், வண்டிகள் இவற்றைப் பற்றி யோசனையே வேண்டியதில்லை.” என்பது ஓர் உதாரணம். ” “மடாதிபதிகளும் ஸந்நிதானங்களும் தமது தொந்தி வளர்வதை ஞானம் வளர்வதாகக்கொண்டு ஆனந்தமடைந்து வருகின்றனர்”என்பது இன்னுமோர் உதாரணம்.

அரசாணையின்  இணைப்புக் கூறுவதை விட  உணர்ச்சியத் தூண்டும் வாக்கியங்கள் கதையில் இருக்கின்றன. “கோசல நாட்டுப் பிரதேசங்களில் கொடிய பஞ்சம் பரவி யிருக்கிறதென்றும், பஞ்சத்தில் கஷ்டப்படும் ஜனங்களுக்குச் சோறு, துணிகொடுக்க வேண்டுமென்ற கருத்துடன் தாம் நிதிகள் சேர்த்து வருவதாகவும், பல வாலிபர்கள் தம்மிடமிருந்து திரவியங் கொண்டுபோய் பஞ்சமுள்ள ஸ்தலங்களிலிருந்து உழைத்து வருவதாகவும் தெரிவித்துவிட்டு, “நீரும் போய் இவ் விஷயத்தில் வேலை செய்யக் கூடாதா?” என்று கேட்டார்.

ஆ – ஆ! ஆ ராமசந்திரன் அரசு செலுத்திய நாடு! வால்மீகி முனிவர் புகழ்ந்து போற்றிய நாடு அங்கு ஜனங்கள் துணியும் சோறு மில்லாமல் பதினாயிரக் கணக்காகத் தவிக்கிறார்கள் அவர்களுக்கு உதவி செய்யப் போவாயா என்று என்னைக் கேட்கவும் வேண்டுமா? அவர்க ளெல்லோரும் எனக்குத் தெய்வங்க ளல்லவா? அவர்களுக்கு வேண்டியன செய்ய முடியாவிட்டால் இந்தச் சதை யுடம்பை எதன் பொருட்டாகச் சுமக்கிறேன். . . .உன்னால் எனது தாய் நாட்டிற்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது? எழுந்திருந்து வா, பார்ப்போம்! எத்தனை நாள் இப்படி உறங்கி அழியப் போகிறீர்களோ! அட, பாப ஜாதியே, பாப ஜாதியே!”  என்பது ஓர் எடுத்துக்காட்டு.

இது போன்ற உணர்ச்சி சார்ந்த வாக்கியங்களை விட்டுவிட்டு அரசு ஏன் சாதாரண உண்மை சார்ந்த சுய விமர்சனத்தைத் தடைக்குரிய செயலாகப் பார்க்கிறது?

இதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் ஆறில் ஒரு பங்கோடு சேர்த்துத் தடை செய்யப்பட்ட சுயசரிதையின் வரிகளைப் பார்க்க வேண்டும். கனவு என்ற அந்த சுயசரிதை 49 கண்ணிகள் (பாடல்கள்) கொண்டது.  அதில் 21-29 வரை உள்ள பாடல்கள், 39ஆம் பாடல், 46 ஆம் பாடல் ஆகியவை ‘அரசின் மீது வெறுப்பைத் தூண்டுவதாக’ அரசாணையின் இணைப்புக் கூறுகிறது

அப்படி என்ன இருக்கிறது அந்தப் பாடல்களில்?

 

“அற்பர் கல்வி”,(பாடல் 22) “பேடிக் கல்வி” (பாடல் 21) “மடமைக் கல்வி” (பாடல் 46)  “மாக்கள் பயின்றிடும் கலை” (பாடல் 22) “ஊணர் கலைத் திறன் (பாடல் 21) எனப் பலவாறாக ஆங்கிலக் கல்வியை இந்தப் பாடல்களில் சாடுகிறார் பாரதி. 39 ஆம் பாடல் அவரது தந்தை தொடங்கிய தொழிலகம் முடங்கியதைச் செல்லும் பாடல் “ஊணர் செய்த சதி” என்பதைத் தவிர அதில் ஆங்கிலேயர்களைப் பழிக்கும் சொல் ஏதும் இல்லை. அதுவும் கூட ஆங்கிலேயர்களைப் பழிக்கிறதே ஒழிய அரசை நேரடியாகச் சாடவில்லை. (ஊணர் என்பது கொள்ளைக்காரர்களைக் குறிக்கும் ஒரு சொல்  HOON  என்பதன் தமிழ் வடிவம்) 46 ஆம் பாடல் விரக்தியின் வெளிப்பாடு. மடமைக் கல்வியால் ஒரு மண்ணும் பயனில்லை. ஏன் பிறந்தேன் இந்த நாட்டிலே என்று தன்னைத் தானே நொந்து கொள்ளும் பாடல் அது.  அப்படியிருக்க  அது அரசின் மீது வெறுப்பைத் தூண்டுவதாக ஏன் கருதியது பிரிட்டீஷ் அரசு?

தடைக்குரியதாகக்  கருதப்பட்ட இந்த 21-29 வரை உள்ள பாடல்களில்தான்

ஐயரென்றும் துரையென்றும் மற்றெனக்கு

ஆங்கிலக் கலையென்று ஒன்றுணர்த்திய

பொய்யருக்கு இது கூறுவன்: கேட்பிரேல்:

பொழுதெலாம் உங்கள் பாடத்தில் போக்கிநான்

மெய்யயர்ந்து விழிகுழி வெய்திட,

வீறிழந்து எனதுள்ளம் நொய்தாகிட,

ஐயம் விஞ்சிச் சுதந்திரம் நீங்கி, என்

அறிவு வாரித் துரும்பு என்ற லைந்ததால்      (பாடல் 28)

செலவு தந்தைக்கோர் ஆயிரம் சென்றது;

தீதெனக்குப் பல்லாயிரம் சேர்ந்தன;

நலமோ ரெட்டுணையும் கண்டிலேன். இதை

நாற்பதாயிரம் கோயிலிற் சொல்லுவேன்    (பாடல் 29)

என்ற புகழ் பெற்ற வரிகள் இருக்கின்றன. இதில் என்ன ஆட்சேபம் அரசுக்கு?

இதில் ஐயர் என பாரதி குறிப்பிடுவது கிறிஸ்துவப் பாதிரிகளை. துரை எனக் குறிப்பிடுவது ஆங்கில அதிகாரிகளை.

கல்வியைப் பரப்புகிறோம் என்ற பெயரில் பாதிரிகள் இந்திய மரபுகளைப் பழித்தும் இழித்தும் பேசியதும், இந்து மதத்தினரிடையே ஜாதி விரிசல்களைப் பிளவுகளாக வலுப்படுத்தி வந்ததும் சமூகத்தில் ஊமைக் கோபங்களை உருவாக்கியிருந்தன. பாரதியின் கோபமும் அதுதான் . அந்தக் கோபம் ஆறில் ஒரு பங்கு கதாநாயகன் கோவிந்தராஜனின் வழியே பகடியாக வெளிப்படுகிறது:

” “நான் சுமார் பதினறு பிராயம் வரை சென்னை கிறிஸ்தியன் காலேஜில் படித்துக் கொண்டிருந்தேன். “வேத காலம் முதலாக இன்று வரை பாரத தேசத்திலுள்ள ரிஷிகளெல்லோரும் ஒன்றும் தெரியாத மூடர்கள். அர்ஜூனனும், காளிதாஸனும், சங்கராசாரியாரும், சிவாஜியும், ராமதாஸரும், கபீர்தாஸரும், அதற்கு முன்னும் பின்னும் நேற்று வரையிருந்த பாரத தேசத்தார் அனைவரும் நெஞ்சில் வளர்த்து வந்த பக்திக்ளெல்லாம் இழிந்த அநாகரிகமான மூட பக்திகள் என்பது முதலான ஆங்கிலேய “சத்தியங்கள்” எல்லாம் என் உள்ளத்திலே குடி புகுந்து விட்டன. ஆனல் கிறிஸ்துவப் பாதிரி ஓர் வினேதமான ஜந்து. ஹிந்து மார்க்கத்திலும் ஹிந்து நாகரிகத்திலும் பக்தி செலுத்துவது பேதமை என்று ருஜுப்படுத்திக் கொண்டு வரும்போதே, அவர் கொண்டாடும் கிறிஸ்து மார்க்கமும் மூட பக்தி என்று வாலிபர் மனதில் படும்படி ஏற்பாடு செய்து விடுகிறார்”

ஆறில் ஒரு பங்கின் இந்தப் பகுதியும் ஆட்சேபத்திற்குரிய பகுதியாக ஆவணக் குறிப்புகளில் காணப்படுகிறது. ஆனால் தடையாணையின் இணைப்பில்  இடம் பெறவில்லை ( ஒரு வேளை சட்ட வல்லுநர்கள் இது தடைக்குஉதவாது  எனக் கருதியிருக்கலாம்)

இது நமக்கு ஒன்றை உணர்த்துகிறது. ஆங்கில அரசு நேரடியான அரசியல் விமர்சனங்களை விட அது மேற்கொண்டு வந்த பிரித்தாளும் அரசியல், கல்வி மூலம் இந்தியர்களிடையே தாழ்வு மனப்பான்மை ஏற்படச் செய்து அவர்கள்  மனதில் ஆங்கிலேயர்களை உயர்ந்தவர்களாக ஏற்றுக் கொள்ளச் செய்வது என்ற  மறைவோட்ட உத்திகள் விமர்சனத்திற்குள்ளான போதும், அம்பலப்படுத்தப்பட்ட போதும் பதற்றமடைந்திருக்கிறது என்பதே அது. அதன் வெளிப்பாடே ஆறில் ஒரு பங்கு, கனவு ஆகியவற்றிற்கு விதிக்கப்பட்ட தடைகள். ஆஷ் கொலை வழக்கு அதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.

இரண்டாம் முறையாக பாரதியின் எழுத்துக்கள் தடையைச் சந்தித்தது 1928ஆம் ஆண்டு. அப்போது பாரதி உயிரோடு இல்லை. ஆனால் அவரது எழுத்துக்கள் உயிர்ப்போடு இருந்தன.

மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் ஆங்கிலேயருக்கு அதிகாரமும், ஆங்கிலேயர் அல்லாதருக்குப் பொம்மைப் பதவிகளும் கொடுக்கும் இரட்டை ஆட்சி முறை அமல்படுத்தப்பட்டபோது, (1919)  பத்தாண்டுகளுக்குப் பிறகு அதைக் குறித்து ஆய்வு நடத்த ஒரு கமிஷன் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 1928ல் அமைக்கப்பட்டதுதான் சைமன் கமிஷன்.

அது இந்தியாவிற்கு மட்டுமின்றி, அப்போது பர்மா என்றழைக்கப்பட்ட இன்றைய மியான்மருக்கும் வருகை தந்தது. அதன் வருகை இந்தியாவில் மட்டுமன்றி பர்மாவிலும்  கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. பர்மாவில் பெரும் பேரணிகள் நடந்தன. பர்மாவில் கணிசமான அளவில்  இருந்த தமிழர்கள்  அந்தப்  பேரணிகளில் பங்கேற்றனர். அவர்கள் தங்கள் கையிலேந்திச் சென்ற புத்தகம், பாரதியின் மறைவுக்குப் பின், 1922ல் பாரதி ஆச்ரமம் என்ற தனது பதிப்பகத்தின் மூலம், செல்லம்மா பதிப்பித்த சுதேச கீதங்கள் 1 & 2 என்ற இரு நூல்கள்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து நூல்களைப் பறிமுதல் செய்த பர்மாவில் இருந்த பிரிட்டீஷ் அதிகாரிகள் அதை மொழிபெயர்த்தனர். அதில் அரசுக்கு விரோதமான கருத்துக்கள் இருந்ததாகக் கூறி பர்மா நிர்வாகம் 1928 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஏழாம் தேதியன்று அந்த நூல்களுக்குத் தடை விதித்தது. அவை தமிழ் நூல்கள் என்பதால் சென்னைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னை அரசு 1928ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி  அந்த நூல்களுக்குத் தடை விதித்து, நூல்களைப் பறிமுதல் செய்ய  பின்வரும் ஆணையைப்  பிறப்பித்தது.

 

“1898-ம் வருடத்திய இ.பி.கோ. 99ஏ) பிரிவுப்படி சென்னை திருவல்லிக்கேணி பாரதி ஆச்ரமத்தார் பிரசுரம் செய்திருக்கும் சி. சுப்பிரமணிய பாரதியாரின் தேசீய கீதங்கள் முதல் இரண்டு பாகங்களிலும் ராஜத் துரோகமான விஷயங்கள் அடங்கியிருப்பதால், அவைகளைப் பிரசுரம் செய்வது இ.பி.கோ.124 (ஏ) பிரிவின்படி குற்றம் ஆகும். ஆதலால், அப்புத்தகங்கள் எங்கிருந்தாலும் அவைகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.”

 

பாரதியின் நினைவு நாளில் அவருக்குத்தான் எத்தகைய பரிசு!

இதனைத் தொடர்ந்து  காவல்துறையினர்  ஹிந்தி பிரசார சபை, பாரதி பிரசுராலயம், விற்பனை நிலையங்கள் ஆகிய இடங்களில் புகுந்து “சுதேச கீதங்கள் முதலிரு தொகுதிகளின் நூல் பிரதிகளை 1928 செப்டம்பர் 20-ஆம் தேதி கைப்பற்றினர். இச்செய்தியை அறிந்த சுதேசமித்திரன்  தனது 21.9.1928-ஆம் தேதியிட்ட தலையங்கத்தில் “இந்த விஷயத்தைப் பற்றிய காரணத்தைச் சட்டசபை உறுப்பினர்கள் கேட்க வேண்டும்” என்று வற்புறுத்தியது.

வீதியிலிருந்து விஷயம் சட்டமன்றத்திற்குள் நுழைந்தது. 1928 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி சத்தியமூர்த்தி சட்டசபையில்  ஓர் ஒத்தி வைப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். விவாதத்தில் பின்னாளில் எமர்ஜென்சியின் போது அதை எதிர்த்த ராம்நாத் கோயாங்கா உட்பட பலர் பேசினர். கிருஷ்ணன் நாயர் என்ற உறுப்பினர் மாத்திரம் எதிர்த்து வாக்களித்தார். அரசுத் தரப்பைச் சேர்ந்த டாக்டர். சுப்புராயன், முத்தையா முதலியார் ஆகியோர் நடுநிலை வகித்தனர்.

தடை நீக்கப்பட்ட பிறகு அரசால்  பறிமுதல் செய்யப்பட்ட 2420 பிரதிகளிலும் ” இந்த நூல் அரசால் பறிமுதல்  செய்யப்பட்டு. திருப்பிக் கொடுக்கப்பட்டது” என்ற முத்திரையிடப்பட்டு விற்பனைக்கு வழங்கப்பட்டது.

ஆகா! அதுதான் என்ன மாதிரியான ராஜ முத்திரை!

About the Author

maalan

Maalan, born in 1950 in Srivilliputhur, Tamil Nadu, emerged as a literary figure with a penchant for poetry. At the age of 16, he made his debut in the literary world through both poetry and prose. From 1970 to 1985, he contributed numerous short stories and poems in literary journals throughout Tamil Nadu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these