தகப்பனைப் போல ஒரு முன்னோடி

maalan_tamil_writer

மாலன்

காற்று வேகமாக வீசும்போது கதவுகள் படீரெனெ திறந்து கொள்வதைப் போல பத்திரிகைப் பணி பாரதியின் மனக் கதவுகளைத் திறந்தது. அவரது பார்வை விரிந்தது.

அவர் பத்திரிகைத் தொழிலுக்கு வந்திருக்கவில்லையென்றால் அதிக பட்சமாக அவரது காலத்தில் வாழ்ந்திருந்த பல சிறந்த தமிழறிஞர்களைப் போல ஓரு தமிழ் அறிஞராக சிறப்பெய்தியிருக்கக் கூடும்.  அவரது காலத்தில் உ.வே.சாமிநாதய்யர், இரண்டு ராகவய்யங்கார்கள், ம.கோபாலகிருஷ்ணன், நாவலர் சோமசுந்தர பாரதி, அரசஞ்சண்முகனார் எனப் பல தமிழறிஞர்கள் வாழ்ந்தார்கள்  அவர்கள் எல்லோரும் செவ்வியல் தமிழுக்கும், இலக்கணத்திற்கும் பங்களித்தார்கள். பத்திரிகைத் தொழிலுக்கு வரும் முன்  பாரதி எழுதிய  கடினமான நடையைக் கொண்ட, இலக்கண சுத்தமான, கவிதைகளைப் பார்க்கும்போது அப்படித்தான் ஊகிக்கத் தோன்றுகிறது.

ஆனால்  பாரதியை அவரைச் சுற்றிப் பேரெழுட்சியுடன் மலர்ந்து கொண்டிருந்த நவீன உலகை நோக்கிச் செலுத்தியது அவர் இணைந்து கொண்ட பத்திரிகைத் தொழில்.

அதற்கு சாட்சியாக இருப்பது அவர் ஹிண்டுவிற்கு ஆங்கிலத்தில் எழுதிய ஒரு கடிதம். சென்னைக்கு வந்த சில நாள்களிலேயே அவர் அந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறார். 1904ஆம் ஆண்டு நவம்பர் 10 ம் தேதி வரை அவர் மதுரையில் சேதுபதி பள்ளியில் பணியில் இருந்திருக்கிறார். அதன் பின் அவர் நவம்பர் மத்தியில் சென்னையில் சுதேசமித்ரனில் சேர்ந்திருக்கலாம். அந்தக் கடிதம் 1904ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹிண்டுவில் வெளியாகியிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் சுதேசமித்ரனில் அவரது படைப்புகள் ஏதும் வெளியாகும் முன்னரே (அதற்கு 10 மாதங்கள் ஆயிற்று) சென்னை வந்த சில நாள்களிலேயே இந்தக் கடிதம் ஹிண்டுவில் பிரசுரமாகி இருக்கிறது. அந்தக் கடிதம் வெறும் கடிதமல்ல. அது கனல் மணக்கும் பூ.

அதைக் கனல் மணக்கும் பூ எனச் சொல்லக் காரணம் அதில் வெளிப்படும் பாரதியின் அறச்சீற்றம். அந்தக் கடிதத்தில் பாரதி எழுதுகிறார்: “அரசியல் விடுதலை என்பது நான் இந்த நாட்டைச் சார்ந்தவன் என்ற தேசிய உணர்வு இல்லாமல் ஏற்படாது. எங்கே ஜாதி அமைப்பு இருக்கிறதோ அங்கு தேசிய உணர்வு ஏற்படாது.இந்த ஜாதி அமைப்பு என்பது விசித்திரமானது. பறையர் ஒருவர் அறக் கொடைகள் அளிக்கும் வள்ளலாக இருந்தாலும் அவரை ஒரு பிராமணத் தரகனை விடத் தாழ்ந்தவராகவே அது நடத்தும். இங்கிலாந்தில் உரிய தகுதிகள் கொண்ட செருப்புத் தைக்கும் இளைஞன் அந்த நாட்டின் பிரதமராக ஆவதற்கு அங்கு எந்தத் தடையும் எவரிடமிருந்து எழாது ஆனால் சமஸ்கிருத இலக்கியங்களில் இணையற்ற ஞானமும், உயர்ந்த ஒழுக்கமும் பக்தியும் கொண்ட சூத்திரன் ஒருவன் இந்து மடம் ஒன்றின் பீடாதிபதியாக வர முடியும் என இந்தியாவில் எவராவது நம்பினால் அவர் தேசத் துரோகியாகக் கருதப்படுவார் சூத்திரனே வர முடியாது என்னும் போது பஞ்சமரைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. ஏன் மக்கள் விரும்பியே குருடர்களாக இருக்கிறார்கள்? தேசிய காங்கிரசில் மிகச் சிறந்த தொண்டர்கள் இருக்கிறார்கள், அந்தன் லட்சியங்கள் உயர்ந்தன என்பதை நான் ஏற்கிறேன். ஆனால் குழந்தைப் பருவத்திலேயே விதவையாகிவிட்ட ஒரு பெண் என்றென்றும் துயரத்திலேயே ஆழ்ந்திருக்க வேண்டும் என எண்ணும் கல் நெஞ்சம் கொண்ட ஒருவர் தலைமைப் பீடத்திலிருந்து மக்களை எழுட்சியுறச் செய்ய முடியும் என எவரேனும் நம்புவார்களா?” என்று அந்தக் கடிதத்தில் பொரிந்து தள்ளும் பாரதி “சமூக சீர்திருத்தம் இல்லாமல் அரசியல் சீர்த்திருத்தம் என்பது ஒரு கனவு. பொய். ஏனெனில் சமூக அடிமைகள் அரசியல் சுதந்திரம் என்ன என்பதை ஒருபோதும் அறிந்து கொள்ள இயலாது.” என்று கடிதத்தை முடிக்கிறார்.  

இந்த சீற்றத்தின் ஊற்றுக் கண் ஜி.சுப்ரமணிய ஐயர். ஜி.சுப்ரமணிய ஐயரைப் பற்றித் தமிழ் நாட்டில் அதிகம் பேசுவாரில்லை. மறக்கப்படுவதற்காகவே பிறக்கிறவன் பத்திரிகையாளன் என்பதற்கான மற்றொரு நிரூபணம் அவர். அவரைப் பற்றிப் பேசுகிற ஒரு சிலரும் அவர் ஹிண்டு சுதேசமித்திரன் பத்திரிகைகளின் ஆசிரியர், நிறுவனர் என்றோ, மிதவாதி என்றோ ஓரிரு வரிகளில் சுருக்கி விடுவார்கள்.

இவையெல்லாம் உண்மைதான். ஆனால் முழுமையான உண்மைகள் அல்ல. ஜி. சுப்ரமணிய ஐயர் பலவிதங்களில் முன்னோடி. அரசியல் மேடைகளில் தமிழில் பேச வேண்டும் என்ற வழக்கத்தை ஏற்படுத்தியவர் அவர்தான். மதப் பிரசாரகர்கள் ஊர் ஊராய்ப் போய் பரப்புரை செய்வதைப் போல அரசியல் ஆர்வலர்களும் தலைவர்களும் பிரசாரம் செய்ய வேண்டும் எனச் சொல்லி அதைத் தொடங்கியவரும் அவர்தான். ஊராட்சி நகராட்சி அமைப்புகளில் பங்கு பெற வேண்டும் என்பதைத் தமிழில் கேள்வி பதில் வடிவத்தில் விளக்கிக் கையேடு வெளியிட்டவரும் அவர்தான்.இவற்றின் நீட்சி அல்லது இன்னொரு வடிவம்தான்  அவரது பத்திரிகைகள்.

அவரது மற்றொரு முகம், அதிகம் அறியப்படாத முகம், அவர் ஒரு சமூக சீர்த்த ஆர்வலர் என்பது. இந்து மதத்தில் இருந்த தீண்டாமை, குழந்தைத் திருமணம் போன்ற வழக்கங்களைக் கடுமையாக எதிர்த்தவர். அதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட  இந்து ஆசார சீர்திருத்த சபையின் நிறுவனவர்களில் ஒருவர். மேலே குறிப்பிட்டுள்ள கடிதத்தை பாரதி ‘இந்து ஆசார சபையின் உறுப்பினர்’ என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு கையெழுத்திட்டிருக்கிறார்

ஜி.சுப்பரமணிய ஐயர் பேச்சளவில் நிறுத்திக் கொண்டவர் அல்ல. தன் வாழ்க்கையிலும் மேற்கொண்டு காட்டியவர். அவரது மூத்த மகள் சிவப்பிரியை 13 வயதில் விதவையானபோது அவருக்கு மறுமணம் செய்து வைத்தவர். அதன் காரணமாக ஜாதியிலிருந்து விலக்கி வைக்கப்படுவார் என எச்சரிக்கப்பட்டவர். அதைப் பொருட்படுத்தாமல் அவர் அந்தத் திருமணத்தை 1889ஆம் ஆண்டு பம்பாயில் முதல் காங்கிரஸ் மாநாடு கூடிய போது நடத்தினார். வேறு ஒரு சமயம், திருவல்லிக்கேணியில் ஒரு வீட்டில் மரணம் நேர்ந்த போது இறந்தவருக்கான இறுதிச் சடங்குகளைச் செய்ய மறுத்து அந்தணர்களும் உறவினர்களும் புறக்கணித்தனர். காரணம் இறந்தவர் இளம் வயதில் விதவையான தன் குழந்தைக்கு மறுமணம் செய்து வைத்திருந்தார். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட ஜி.சுப்ரமணிய ஐயர், அந்த வீட்டிற்கு சென்று உறவினர்களுடன் பேச்சு நடத்தி வேறு சில புரோகிதர்களை ஏற்பாடு செய்து அந்தச் சடங்குகள் நடைபெறச் செய்தார்.

இந்து மத சீர்திருத்தங்களை மேற்கொண்டதற்காக  அவர் கொடுத்த விலை மிகப் பெரிது. அந்த விலை  அவர் தன் உழைப்பையும் செல்வத்தையும் கொண்டு உருவாக்கிய ஹிண்டு நாளிதழ்.

இந்து ஆசார சீர்திருத்த சபையைப் போல சுப்ரமணிய ஐயர் சம்பந்தப்பட்டிருந்த இன்னொரு அமைப்பு திருவல்லிக்கேணி இலக்கிய சங்கம். அதைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள்தான் ஹிண்டு பத்திரிகையைத் தொடங்கியவர்கள். ஜி.சுப்ரமணிய ஐயர், எம்.வீரராகவாச்சாரியார், டி.டி.ரங்காச்சாரியார், பி.வி.ரங்காச்சாரியார், டி.கேசவராவ், என்.சுப்பாராவ் பந்துலு  ஆகிய ‘திருவல்லிக்கேணி அறுவர்’தான் 1878ஆம் ஆண்டு செப்டம்பர் 20 அன்று, முதன் முறையாக வெள்ளையர் அல்லாத ஒரு இந்தியர் (முத்துசாமி ஐயர்) உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டபோது எழுந்த எதிர்ப்பிற்கு பதில் கூற ஹிண்டுவைத் தொடங்கினர். அப்போது ஜி.சுப்ரமணிய ஐயருக்கு 23 வயது. இவர்களில் ஜி.சுப்ரமணிய ஐயர், வீரராகவாச்சாரியார் ஆகியோர் ஆசிரியர்கள். மற்ற நால்வரும் சட்டம் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள். அவர்கள் படிப்பு முடிந்ததும் வக்கீல் தொழிலை கவனிக்கப் போய் விட்டனர். ஜி.சுப்ரமணிய ஐயர், வீரராகவாச்சாரியர் இருவர் மட்டுமே பத்திரிகையை நடத்த வேண்டிய நிலை. சுப்ரமணிய ஐயர் ஆசிரியர் பொறுப்பை கவனிப்பது என்றும், வீரராகவாச்சாரியர் நிர்வாக இயக்குநராக பத்திரிகையின் விற்பனை, நிதி விஷயங்களைக் கவனிப்பது என வேலைகளைப் பங்கிட்டுக் கொண்டனர்.

எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. வரப்பத்திரிகையாகத் தொடங்கிப் பின் வாரம் மும்முறையாக வளர்ந்து, 1887ஆம் ஆண்டு சென்னையில் முத்ன்முறையாக காங்கிரஸ் மாநாடு நடந்த பின் 1889ஆம் ஆண்டு மாலை நாளிதழாக மலர்ந்தது. பிரச்சினை ஜி.சுப்ரமணிய ஐயரின் எழுத்தின் மூலம் நுழைந்தது.

ஜி.சுப்ரமணிய ஐயர் பிரிட்டீஷ அரசின் செயல்கள், அதிகாரிகளின் அத்து மீறல், இவற்றோடு தீண்டாமை, குழந்தைத் திருமணம் ஆகியவற்றை விமர்சித்து எழுதி வந்தார். அவரை மிதவாதி, மென்மையானவர் என்று விமர்சிப்பவர்கள் அவரது எழுத்துக்களை வாசித்துவிட்டுத்தான் பேசுகிறார்களா என்று நான் எண்ணுவது உண்டு. காரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதுபவர் அவர். சுதேசமித்திரனில் அவர் எழுதிய தலையங்கத்திலிருந்து ஒரு உதாரணம் தருகிறேன்:

மதுரையில் வெங்கோபாச்சாரியார் என்பவர் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தார். ஒரு நாள் காலையில் மாணவர்கள் பள்ளியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் வழக்கமான பிரார்த்தனை பாடல்களுக்குப் பின் வந்தேமாதரம் பாடலைப் பாடினர். ஆத்திரம் அடைந்த வெங்கோபாச்சாரியார் ஒன்றரை மணி நேரம் மாணவர்களை பெஞ்ச்சின் மேல் நிற்க வைத்து, மிரட்டி, இதற்குக் காரணமாக இருந்த நான்கு பேர் யார் எனக் கண்டுபிடித்து விட்டார். அந்த நான்கு பேரையும் பிரம்பால் விளாசிவிட்டார். அவர்களில் ஒருவருக்கு மணிக்கட்டு பிசகிவிட்டது. சுப்ரமணிய ஐயர் சுதேசமித்திரனில் செய்தியும் வெளியிட்டுத் தலையங்கமும் எழுதினார். அதில் ஒரு வரி: “ ஹிந்துப் பிள்ளைகள் ஹிந்துக்களே நடத்தும் ஸ்தாபனங்களில் கல்வி கற்பதன் முக்கிய பலன் தேசாபிமானம் என்கிற உத்தமோத்தமான நல்லுணர்ச்சியைக் கற்பது. அப்படி ஹிந்துப் பிள்ளைகள் தேசாபிமானம் கற்பதால் வெங்கோபாச்சாரிக்குக் கோபம் உண்டாகுமானால் இவரைவிடக் கிறிஸ்துவ மதத்தைத் தழுவின குரங்கு மூஞ்சித் தொப்பிக்காரன் ஒருவன் பிரின்சிபலாக இருக்கலாமே?”

குரங்கு மூஞ்சித் தொப்பிக்காரன் என்பது உருவ கேலியாக இருந்தாலும், அந்த சொற்றொடர் இல்லாமலே இந்தக் கண்டனத்தை எழுதியிருக்கலாம் என்றாலும் அது அவரது சீற்றத்தைக் காட்டுகிறது. இந்தச் சீற்றம், அரைக்கணம் இதை பாரதி எழுதியிருப்பாரோ என்ற மயக்கத்தைத் தந்தாலும் இதை எழுதியது பாரதி இல்லை. ஐயர்தான். ஏனெனில் இந்தத் தலையங்கம் வெளியானது 1906 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி. அப்போது பாரதி இந்தியா பத்திரிகைக்குப் போய்விட்டார். அதுமட்டுமல்ல, அவர் இந்தத் தலையங்கத்தை வரவேற்று களி கூத்தாட இந்தியா பத்திரிகையின் 13.10 1906 ஒரு கட்டுரையும் எழுதியிருக்கிறார்

சுப்ரமணியத்தின் ஆங்கில நடையும் இதுபோலக் காரமானதுதான்.அதிலும் குறிப்பாக நம் கலாசாரத்தில் இருந்த குறைகளைப் பற்றி எழுதும் போது. உதாரணத்திற்கு ஓரிடத்தில் சுப்ரமணியம் எழுதுகிறார்: (நம்) “கலாசாரத்தின் தொன்மை எவ்வளவு போற்றுதலுக்குரியதாக இருந்தாலும் அது நடைமுறையில் பழமையானதாகவும் பயனற்றதாகவும் ஆகிவிட்டது” (“a civilisation which however venerable its antiquity is for practical purposes more or less antiquated and useless)

சமரசம் செய்து கொள்ளாத சுப்ரமணியத்தின் எழுத்துக்கள் பார்டனர்ஷிப்பில் விரிசலை ஏற்படுத்தின அவர் முன்வைக்கும் கடுமையான வாதங்கள் பத்திரிகையின் விற்பனையை பாதிப்பதாக வீரராகவச்சாரியர் கருதினார். ஏற்கனவே அரசுக்கு எதிராக எழுதப்பட்ட தலையங்கங்கள் காரணமாக பத்திரிகை பல வழக்குகளை சந்தித்துக் கொண்டிருந்ததால் நிதி நெருக்கடி ஏற்படத் தொடங்கியிருந்தது

விரிசல் பிளவானவது அவர் தீண்டாமை பற்றி எழுதிய ஒரு கூர்மையான  விமர்சனத்தால்.

தீண்டத்தகாதவர்கள் எனக் கருதப்பட்டவர்களின் தாழ்ந்த நிலை குறித்தூ எழுதும் போது “ இழிவானதாகவும், விநோதமாகவும் உள்ள இந்து சமூக அமைப்பு (தாழ்த்தப்பட்டவர்களுக்கு)  எந்த வித மேம்பாட்டையும் அனுமதிக்கும் என்று எந்த நம்பிக்கையும் இல்லை.நம் மதத்தின் மீது நாம் கொண்டிருக்கும் எத்தகைய மதிப்பும்  இந்த ஏழை மக்களுக்கு விடுதலை கொண்டுவராது (“notorious and the peculiarities of The Hindu social system are such that from this system no hope whatever of their amelioration can be entertained… no amount of admiration for our religion will bring social salvation to these poor people.”)

.ஜி.சுப்ரமணிய ஐயர் தீண்டாமைக்கு எதிரான தன் குரலை, எழுத்துக்களை மட்டுப்படுத்திக் கொள்ள இணங்கவில்லை. பார்ட்னர்ஷிப்பை முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் பார்டனர்கள் கருதினர். பிர்பல வழக்கறிஞர் நார்ட்டன் முன் ஹிண்டுவை விட்டு சுப்ரமணியம் விலகி விடவேண்டும் என்றும் வீரராகவாச்சாரியாரே ஆசிரியர் பொறுப்பை கவனிப்பார் என்றும்  முடிவாயிற்று. தன் உழைப்பாலும் எழுத்தாலும் அறிவுக் கூர்மையாலும் வளர்த்த பத்திரிகை சாம்ராஜயத்தை தாழ்த்தப்பட்டவர்களுக்காகக் குரல் எழுப்பியமைக்காக இழந்து ஜி.சுப்ரமணிய ஐயர் வெளியேறினார். மிச்சமிருக்கும் சுதேசமித்திரன் மூலம் தன் பணியையும் லட்சியங்களையும் தொடர்ந்தார்.

இது எவ்வளவு உன்னதமான செயல்! சுப்ரமண்ய சிவா இதைப்பற்றி இப்படி எழுதினார்; “தேசாபிமானமும்  பாஷாபிமானமும் இன்னவையென்று எவரும் உணராத அக்காலத்தில் அதாவது ‘சுதேசமித்திரன்’ ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ப்ரஹ்மஸ்ரீ சுப்பிரமணிய ஐயரவர்கள் தாம் நடத்திக் கொண்டிருந்த ‘ஹிந்து’ என்ற ஆங்கில பத்திரிகையை விட்டுவிட்டுச் சாதாரண ஜனங்களுக்குள் அறிவைப் பரப்பும் பொருட்டுத் தமிழ்ப் பத்திரிகையை ஆரம்பித்தது மிகவும் வியக்கத்தக்கது.” (ஞானபாநு – 1916- ஆகஸ்ட்)

பாரதி சுப்ரமணிய ஐயரை எப்படிப் பார்த்தார்? : “இராமலிங்க சுவாமிகளும், சுதேசமித்திரன் சுப்பிரமணிய ஐயரும் இவர்களைப் போன்ற வேறு சில மகான்களும் தமிழ்நாட்டின் புதியவிழிப்பிற்கு ஆதி கர்த்தாக்களாக விளங்கினர்.” (சுதேசமித்திரன் 1918 மே- 31- ) என்று எழுதினார் பாரதி. அவர் சுப்பிரமணிய ஐயரை வள்ளலாருக்கு நிகராக வைக்கக் காரணம் சுப்ரமணிய ஐயரிடமிருந்த சமூக சீர்திருத்த கருத்துக்கள்தான்

22 வயதில் சமூகம் பற்றி பாரதி  பெற்ற விழிப்புணர்வின் ஆதிகர்த்தாவும் அவர்தான். திலகர் வழியை சுப்ரமண்யம் ஏற்கும் முன்   அவருக்கும் பாரதிக்கும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதுண்டு. அதன் காரணமாக பாரதி அவரை விமர்சித்ததும் உண்டு. ஆனால் கருத்து ரீதியான வேறுபாடுகள் தகப்பனுக்கும் மகனுக்குமிடையே ஏற்படுகிற முரண்பாடுகள் போல.

ஆம் தகப்பன்தான். பாரதிக்கு 33 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் சுப்ரமணிய ஐயர் தனது 49ஆம் வயதில்  22 வயது பாரதியைக் கண்டெடுத்து இதழியலுக்குக் கொண்டு வந்தவர். அது பாரதிக்கு மறு பிறப்பு.

தமிழுக்கும்தான்

கலைமகள் ஜூலை 2024

2 thoughts on “தகப்பனைப் போல ஒரு முன்னோடி

  1. பாரதியை விளக்கும் கட்டுரைத் தொடர்.
    பாரதியை எல்லோரும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கையோடும் , பாரதி மேல் கொண்ட மரியாதை , உரிமை மற்றும் காதலோடு எழுதப்படும் தொடர்.

  2. எவ்வளவு அற்புதமான இலட்சிய வாதிகள் ‘ஹிந்து’ பத்திரிகையோடு சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்! திரு ஜி. சுப்பிரமணிய ஐயர் அவர்களைப் பெரும்பாலும் ‘சுதேசமித்ரன்’ நாளிதழுடன் தான் பொருத்திப் பார்த்திருக்கிறேன். அதை விடவும் ஹிந்துவுக்கு அவர் ஆற்றிய பணி அதிகம் என்பதை உங்கள் கட்டுரையால் உணர்ந்தேன்.

    இந்த இரு பத்திரிகைகளுமே தமிழ்நாட்டின் இரு கண்களாக விளங்கியவை. தேசியத்துடன் தமிழ்ப் பண்பாட்டையும் தூக்கிப் பிடித்தவை. இந்த இரண்டில் ஒன்று, நல்ல மரியாதை இருந்தபோதே மறைந்ததால் மக்கள் மனதில் இன்றும் மறையாமல் உள்ளது….!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.