அடிமைகள்

 அறைக்குள்  நுழைந்தபோது அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். புதிய முகங்கள் – முன்பின் அறிந்திராத  நபர்கள்,  நான்கு  பேர்.  நடுத்தர வயது. நல்ல ஆகிருதி.  உட்கார்ந்திருக்கும்போதே  உயரம் தெரிந்தது. தாடை இறுகிய சதுர முகம். தணல்  போல் சிவப்பு,  விழியோரம்.

  அனந்த்  வந்ததும்  எழுந்தார்கள்,  வணக்கம்  சொன்னார்கள்.

“ நான் ஜகன்னாதன் ” – ஆங்கிலத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார், அவர்களில் ஒருவர்.

 “ அட்வகேட் ” என்று  தொழிலைச்  சொன்னார்  அருகில்  இருந்தவர்.

“ சந்தித்ததில் சந்தோஷம் !  நான் என்ன செய்யக்கூடும் ? என்றான் அனந்த். பக்கத்தில்  இருந்தவரைச்  சுட்டிக் காண்பித்தார்  ஜகன்னாதன்.

 “ இவர் அப்பாராவ். ஆந்திராவின் பெரிய பணக்காரர்களில் ஒருவர். கல்லுடைக்கிற  குவாரி  காண்ட்ராக்ட் எடுத்திருக்கிறார். ”

“ நான்  என்ன  செய்யக்கூடும் ? ”  என்றான்  அனந்த்  மறுபடியும்.

அவர்கள்  ஒன்றும்  பேசாமல்  சிரித்தார்கள்.  அந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்று நிஜமாகவே புரியவில்லை அவனுக்கு. அத்தனை அதிகாலையில் அவர்கள் எதற்காக வந்திருக்கக்கூடும் ?  ஆந்திராவிலிருந்து வந்திருப்பதாகச் சொன்னார்கள். அவசரம் என்றார்கள். ஆதலால் எழுதிக் கொண்டிருந்ததைப் பாதியில் நிறுத்திவிட்டு எழுந்து வந்திருந்தான் அனந்த். ஆனால், அவர்களோ வாயைத் திறக்காமல் சிரித்துக் கொண்டே  இருந்தார்கள்

“ நான்  என்ன  செய்யக்கூடும் ? ”

“ நீங்கள்  எங்கள்  கல்லுடைக்கும்  தொழிலுக்கு  உதவ  வேண்டும். ”

 “ என்னது … ? ”

மறுபடியும்  சிரித்தார்கள்.

 “ நான் எழுத்தாளன் !  அதுவும் செய்திப் பத்திரிகையின் ஆசிரியன். நான் எப்படி உங்களுக்கு  உதவ  முடியும் ?  புரியவில்லையே … ”

இப்போது  ஜகன்னாதன்  பேச  ஆரம்பித்தார்.

“ மிஸ்டர் அனந்த். சுற்றி வளைக்க விரும்பவில்லை. நீங்கள் எழுத்தாளர் என்பது தெரியும் ‘ தி ஒப்பீனியன் ’ பத்திரிகையின் புதிய ஆசிரியர். அதுவும்  தெரியும். வேதபுரியில் சிறைப்பட்டிருக்கும் கொத்தடிமைகளை விடுவிக்கக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்திருப்பதும் தெரியும். ”

அனந்த் நிமிர்ந்து உட்கார்ந்தான். ஓ ! விஷயம் அங்கு நகர்கிறதா ?

“ நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தொழிலாளர்கள் எங்களிடம்தான் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள்.  இன்று நேற்றல்ல,  இரண்டு  தலைமுறைகளாக ! ”

“ பரம்பரையாக அவர்கள் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ”

“ அடிமை என்பதெல்லாம் உங்கள் புஸ்தக வார்த்தைகள். அவர்கள் நியாயமான முறையில் அங்கு வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தங்க இடம் கொடுக்கிறோம். சோறு கொடுக்கிறோம். குடும்பம் மொத்தத்திற்கும் வேலை கொடுக்கிறோம். உங்களுக்குத் தெரியும், அரசாங்கங்களால் கூட இவற்றையெல்லாம் செய்வதற்கு முடிவதில்லை. ” ஜகன்னாதன் மென்மையாக, ஆனால் உறுதியாகப் பேசினார்.

“ பாராட்டுக்கள் ! வக்கீலாக இருந்தாலும் வியாபாரியைப் போல் பேசுகிறீர்கள் ” என்று  சிரித்தான்  அனந்த்.

“ இது  சிரிக்கிற  விஷயமில்லை ! ”   ஜகன்னாதன்  முகம்  இறுகியது

“ நீங்கள் போட்டிருக்கிற இந்த வழக்கின் காரணமாக மக்கள் உங்கள் மீது கொதிப்பாக இருக்கிறார்கள்.

“ எனவே … ”

“ நீங்கள் விசாரணையில் கலந்து கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்க வந்திருக்கிறோம். ”

“ ஸாரி ! எனக்கென்று சில நம்பிக்கைகள், கடமைகள் இருக்கின்றன. நான் அவற்றிலிருந்து பின் வாங்குவதற்கில்லை. ”

இப்போது சட்டென்று அப்பாராவ் ஒரு காரியம் செய்தார். மடியில் வைத்துக் கொண்டிருந்த சிறிய கறுப்புப் பெட்டியைத் திறந்தார். உள்ளே சிறிதும் பெரிதுமாக நோட்டுக்  கட்டுகள்  இருந்தன.

“ இது உங்களுக்குத்தான் … ”

“ நீங்கள்  விலாசம்  தெரியாமல்  வந்திருக்கிறீர்கள் ”  என்று கோபமாக எழுந்தான் அனந்த்.

இதுவரை  பேச்சில்  கலந்து கொள்ளாமலிருந்த இரண்டு பேர் விருட்டென்று எழுந்து வந்தார்கள். உள்ளே போகத் திரும்பி இருந்த அனந்தின் கழுத்துப் பக்கத்தில் பின்னாலிருந்து  ஒரு  வெட்டு  விழுந்தது. கையை விறைத்து, ஆயுதமாக்கி வீசிய கராத்தே வெட்டு,  “ அம்மா” என்று நிலையைப் பிடித்துக் கொண்டு தடுமாறினான் அனந்த்.  அடுத்த  நிமிடம்  மூர்ச்சையுற்றுத்  தரையில்  சாய்ந்தான்.

“ சினிமா  போல்  இருக்கிறதே ! ”  என்றாள்  இந்து.

“ நம்  சினிமாக்கள்  வாழ்க்கையை நெருங்கியிருக்கின்றன  என்பது  உண்மைதான் ”  என்று  சிரித்தான்  ராஜன் – அனந்தின் உதவியாளன். அனந்த் படுக்கையில்  நிமிர்ந்து உட்கார முயற்சித்தான். தோள்பட்டையில் மெலிதாய் ஒரு வலி ஒளிர்ந்தது.

“ அது சரி !  இந்த  வம்பை  எங்கே  வாங்கினாய் ? ”

“ தமிழில்  அதிகம்  விற்கும்  வாரப்  பத்திரிகையில் ! ”

“ என்னது ? ’‘

அனந்த் ஒரு பத்திரிகை கட்டிங்கை எடுத்துக் காண்பித்தான். ஒரு பயணக் கட்டுரைக்கு  நடுவில்  ஒரு வரி.  ஒரே  வரி.

வேதபுரத்திற்கு  அருகில் பத்தாயிரம் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வாழ்ந்து வருகிறார்கள் ! ’சிவப்பில் அடிக்  கோடிடப்பட்டிருந்தது.

“ நானும்  படித்தேனே  இதை. ”

“ படித்திருப்பாய். ஐந்து லட்சம் பிரதி விற்கிறது இந்தப் பத்திரிகை. அதனால் குறைந்தது  ஐம்பது லட்சம் பேராவது படித்திருப்பார்கள். ஆனால், ராஜனுக்குப் படித்துவிட்டு  சும்மா  இருக்க முடியவில்லை. இங்கே கொண்டு வந்தான். இதை இணைத்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிக்குக் கடிதம் எழுதினேன். கடிதத்தை ரிட் மனுவாக எடுத்துக் கொண்டு விட்டார்கள். விசாரணைக்கு உத்தரவாகி இருந்தது. விசாரணை ஆரம்பமாகிவிட்டது  நண்பர்கள் வந்து  போனதில்  இருந்து  தெரிகிறது. ”

“ இத்தனை  நடந்திருக்கிறது ;  நீ  என்னிடம்  வாயே  திறக்கவில்லையே ! ”

“ விஷயம் மொத்தமும் முடிந்ததற்குப்பின்,  கட்டுரையாக எழுதலாம் என்றிருந்தேன். ”

“ இப்போதே  இதைச்  செய்தியாய்  வெளியிட்டு  விடலாம். ”

“ அது  மிக  நல்ல  காரியம் ”  என்றான்  ராஜன்.

 “ வேண்டாம், ப்ளீஸ் ! ”

 “ ஏன் ? ”

 “ அது  வெறும்  விளம்பரம்.  வேண்டாம். ”

“ உனக்கு  வேண்டாம் விளம்பரம். பத்திரிகைக்கு வேண்டும். இதனால் இன்னும் ஒரு  பத்தாயிரம்  காப்பி விற்றால்  கசக்குமா  என்ன ? ”

அனந்த்  பேசவில்லை.

“நீ எழுத்தாளன். விஷயத்தைப் பார்க்கிறாய். நான் முதலாளி. விற்பனையை யோசிக்கிறேன்.

“ அதுதான்  கவலையாய்  இருக்கிறது. ”

வேதபுரத்திற்குப்  புறப்படுவதற்கு  இரண்டு நாள் முன்னால் அந்தத் துக்கம் நேர்ந்தது. ராஜனின் தங்கை, அடுப்படியில்  வேலை  செய்து கொண்டிருந்தபோது, புடவை தீப்பிடித்து இறந்துபோனாள்.

அதிர்ந்து போனான் அனந்த். சின்ன பெண். துருதுருவென்று அலையும்  கண்கள்.  ராஜனுக்கு  இணையான புத்திக் கூர்மை,  சாதுர்யம் !  ஆனால், கல்யாணத்திற்குப் பின் ஒடுங்கிப் போனாள். புகுந்த வீட்டு மனிதர்கள்,  அவளின் புத்திசாலித்தனம்  கண்டு  மிரண்டார்கள்.

அவள் எரிந்து போனது கேட்டு ராஜன் இடிந்து போகவில்லை. வெடித்து உடையவில்லை. விசும்பி அழவில்லை. ஆத்திரப்பட்டான். இது கொலையோ என்று சந்தேகப்பட்டான். துக்க வீட்டில் தடையம் தேடினான். பக்கத்து வீட்டில் சாட்சியம் கேட்டான்.

“ மாப்பிள்ளையே  கொன்றிருப்பான்  சார் ! ”  என்று  பொருமினான்.

“ அப்படியெல்லாம்  சொல்லாதே  ராஜன். 

“ உங்களுக்குத்  தெரியாது  சார்.  ஒரு  கைதி  மாதிரி  வைச்சிருந்தான்  அவளை.

‘ வரதட்சணை  போறலை.  வேலைக்குப்  போ ன்னு அனுப்பிச்சான் …

“ அப்படிப்பட்டவன்,  சம்பாதிக்கிற  பொண்டாட்டியை  எப்படி ராஜன் கொளுத்துவான் ? அது பொன் வாத்தில்லையோ ? ” –  இந்து  இடைமறித்தாள்.

“ அத்தனை யோசனை கிடையாது மேடம். வீட்டுக்கு வெளியில் மனைவியை அனுப்பினால்  நம்பிக்கை வைக்கணும்.  சம்பாதிக்கிற  பெண்டாட்டி  மேல் சந்தேகம்.”

“ ஸாரி ” என்றான் அனந்த். ஆத்மார்த்தமாக. அதற்குமேல் அவனால் பேச முடியவில்லை.

“ அவன் கையில் காப்புப் போடாமல் நான் ஒயமாட்டேன் சார்!: என்றான் ராஜன்

காரில்  திரும்பிக்  கொண்டிருக்கும்போது,   

“ எப்படி  இது  சாத்தியம் ? ”  என்றான்  திடீரென்று !

“ எது  அனந்த் ? ”

“ பெண்களின்  சுதந்திரம்  பற்றி எத்தனையோ தலைமுறையாகப் பேசி வந்திருக்கிற  தேசம் இது. பெண்கள் தெய்வமாகக் கும்பிடுகிற சமூகத்தில், இப்படி அவர்கள்  உயிரோடு  எரிக்கப்படுவதும்  எப்படி  சாத்தியம்… ?

 “ அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை அனந்த். பெண்களை உடைமையாக எண்ணி வந்திருக்கிற தமிழர்கள். தங்களுடைய எத்தனையோ உடைமைகளைத் தெய்வமாக வழிப்பட்டது போலவே, பெண்டாட்டிகளையும் கும்பிட்டு வந்திருக்கிறார்கள். அந்த அடிமைத்தனத்திற்கு  அன்று சிலைகள் வடிக்கப்பட்டன. இன்று தெய்வாம்சம் போய் விட்டது.  இவர்கள்  சிலைகளும் இல்லை. மனுஷிகளாகவும் அவர்களை அங்கீகரிக்க முடியவில்லை. கலாசாரச்  சிக்கல் ! ”

”இதை கல்சுரல் க்ரைசிஸ் ஆக என்னால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. சோஷலிஸத்தின்  நியாயங்களோ, கேப்பிடலிஸத்தின்  சௌகரியங்களோ முற்றிலும் கிடைக்காத  இந்த  தேசம்,  பணம்  பணம்  என்று வெறிகொண்டு  விட்டதோ என்று  நான் சந்தேகப்படுகிறேன்.  நம்  வேர்கள் புழுத்து விட்டதோ என்று பயப்படுகிறேன். ”

“ எதையுமே  அதீதமாக  எடுத்துக் கொண்டு அவஸ்தைப் படுவதுதான் உன் சுபாவம். ”

 “ நான் அவஸ்தைப்படுவது இருக்கட்டும். நீ ஒரு பெண்ணாக இருந்து கொண்டு, எப்படி  இதை  இவ்வளவு  சுலபமாக  எடுத்துக்  கொள்கிறாய் ? ”

“என்ன செய்ய முடியும்? படிப்பதில், சம்பாதிப்பதில் ஆணுக்கு இணையாக இருசக்கிற பெண்,  இந்த  சமூகத்தின்  கைதி  போன்றே  கண்காணிக்கப்படுகிறாள். மரபு ஒரு புறமும், சுரண்டல் ஒரு புறமுமாக வேலி எழுப்பி, அதற்கு நடுவில் நடக்கவே நம் பெண்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். மீறுகிறவர்களை வேலிகள் கிழிக்கும். கிழிபட்டவர்களைச் சமூகம் எரிக்கும். இதையெல்லாம் தூக்கி எறிகிற பெண் சுதந்திரம்தான்  இதற்கு  மாற்று,  மருந்து,  எல்லாம் ! ”

“ பரவாயில்லையே ! ”

 “ என்ன ? ”

“ என்  மூளைகூட  யோசிக்கிறது ! ”

“ நீ அமெரிக்காவில் இருந்து வருவதற்கு முன்னால், இங்கே இருப்பவர்கள் எல்லாரும் மூடர்களாக இருந்தார்கள் என்ற நினைப்பா உனக்கு ? நான் பரம்பரை ஜர்னலிஸ்ட் ! ”

 அந்தப் பெரிய நகரத்தில் இருந்து இருபது கிலே மீட்டர் தொலைவில் இருந்தது வேதபுரம். சோம்பல் கொண்ட யானைகள் போல் சுற்றிலும் மலைகள். பாதி கடித்து வைத்து விட்டுப் போன பட்சணம் போல, ஒரே ஒரு குன்று மட்டும் கோணலும் மாணலுமாய் நறுக்கப்பட்டிருந்தது. அருகில் தகரம் போர்த்திய கூடாரம். சாய்ந்த கன்வேயர். மனிதர்களைப் பார்க்க இன்னும் உள்ளே போக வேண்டியிருந்தது. பன்றிக் கொட்டில்கள்  போல் சின்னஞ்சிறு குடிசைகள். ஒருவர் படுக்கலாம். இருவர் உட்காரலாம்.

 விசாரணைக்கு  வந்த நீதிபதி, இளைஞர். நேர்மையைக் கைவிடாத மனிதர். இரக்கம், கருணை இதெல்லாம் சட்டத்தோடு சம்பந்தப்பட்டவை என்று நம்பியவர் ! உண்மையைச்  சொன்னால் கொன்று விடுவோம் என்று பயமுறுத்தப்பட்ட கொத்தடிமைகள் கூட,  அன்றைக்கு  அவரைப் பார்த்துத் தேம்பி அழுதார்கள். தினம் நேரும் துக்கங்களைச் சொன்னார்கள். அப்படி ஒரு நெருக்கத்தை நயமாய்ப் பேசி, ஏற்படுத்திக் கொண்டு விட்டார் நீதிபதி ! காண்ட்ராக்டர்களும் பேசினார்கள். ‘ நாங்கள் தவறாக ஏதும் செய்யவில்லை. அவர்களுக்கு அட்வான்ஸாகக் கடன் கொடுத்து, அதற்காகக் கூட்டி வந்திருக்கிறோம்  என்றார்கள்.

அத்தனையும் கேட்க கேட்க ஆச்சரியமாக இருந்தது அனந்திற்கு.  இடைவிடாமல் இருநூறு  வருடம் சுதந்திரத்திற்குப் போராடிய  ஒரு  தேசத்தில், சோற்றுக்கும் துணிக்கும் மனிதர்களை வாங்கிட முடியும் என்பது ஆச்சரியமாக இருந்தது. இந்த சுலபத்தை நினைத்துப் பார்க்கப் பார்க்கக் கலக்கமாக இருந்தது. அடிப்படையிலேயே எங்கோ  தவறு  நேர்ந்திருக்கிறது என்று  புரிந்தது.

கொத்தடிமைகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்புச் சொன்னார் நீதிபதி. போலீஸ்காரர்கள் பணம் வாங்கிக் கொண்டு லாரிகள் கொடுத்தார்கள். கொலை மிரட்டலுக்கும்,  குண்டு புரளிகளுக்கும்  நடுவில் எண்ணூறு பேர் மட்டும் மைதானத்தில் ஒருநாள் தங்கி, இரவு ரயில் ஏறி, அவர்கள் விடுதலைக்குப் பயணமானார்கள்.

இந்தக் கூட்டத்தை ரயில்வே ஸ்டேஷனில் சிலர் வேடிக்கை பார்த்தாரகள். சிலர் விசாரண செய்தார்கள். இன்னும் சிலர் இடக்காய்ப் பேசினார்கள். கவுண்ட்டரில் இருந்த கிளார்க், “ நாங்களும் கொத்தடிமைகள் தான் சார் ; கூட்டிக் கொண்டு போங்கள்  என்று சொன்ன வார்த்தைகள் வெகுநேரம் அனந்தின் காதில் அப்படியே இருந்தன.

 “ அந்தச் சிறுவனுக்குப் பத்து வயதிருக்கும். இரண்டு வருடங்களுக்கு முன்னால் அவன்  தந்தை  இறந்து போனார்.  அப்பாராவ்  என்ற  முதலாளிக்கு  நூற்றைம்பது ரூபாய்  கடனுடன்,  தன்  எட்டாவது  வயதில் நூற்றைம்பது ரூபாய்க்காக ஆயுசு முழுசுமாக அடிமைப்பட்டான்  கொண்டா ரெட்டி.

     கொத்தடிமை…! சுதந்திரமடைந்த ஒரு தேசத்தில், சின்ன துண்டுச் சீட்டில் தலைமுறை முழுக்க எழுதி வாங்கிக் கொண்டு விடுகிற வழக்கம் ! இந்த வழக்கம், குற்றம் என்று சட்டம் இயற்ற இந்திய அரசாங்கத்திற்கு இருபத்தெட்டு வருஷமாயிற்று ! போலீஸும்,  சட்ட  சபையும்,  நீதிமன்றமும்,  பத்திரிகைகளும் இயங்கி வருகிற சமூகத்தில்  இந்தச்  சட்டம்,  புத்தகத்தை  விட்டு நடைமுறைகளுக்கு இறங்கி வர எத்தனை நூற்றாண்டாகும் … ?

  அனந்தின்  கட்டுரையை  டைப்  செய்து முடித்து ராஜன் எழுந்தபோது, இரவு இரண்டு மணி  ஆகியிருந்தது.எனினும் அவனால்  அன்று  தூங்க  முடியவில்லை.

அந்த  ஞாயிற்றுக்கிழமை கட்டுரை  வெளியாகவில்லை. அதற்கு அடுத்த வாரமும் … அனந்த், பிரஸ் சூப்பரின்டெண்டைக் கூப்பிட்டுக் விசாரித்தான். கட்டுரை இந்துவிடம் இருக்கிறது. படிப்பதற்காகக் கேட்டு வாங்கிக் கொண்டு போன கட்டுரை இன்னும்  திரும்பி வரவில்லை. இண்டர்காமில்  இந்துவைக்  கூப்பிட்டான்.

“ இந்து,  என்  கட்டுரை  உன்னிடம்  தங்கிவிட்டது  போலிருக்கிறதே !

  ஒரு நிமிஷம் வந்துவிட்டுப் போக முடியுமா ?  அதைப் பற்றி நேரில் பேச விரும்புகிறேன்.

  பப்ளிக் ஒப்பீனியன்  இஸ்  தி பெஸ்ட் ஒப்பீனியன் ’’  என்று கொட்டையாய் கொள்கை வாசகம் எழுதப்பட்ட கண்ணாடிக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான்  அனந்த்.  ஏர்கண்டிஷன்  முகத்தில் குளிர்ச்சியை  இறைத்தது.

“ உன்  கட்டுரையைப்  படித்தேன்,  கங்கிராஜுலேஷன்ஸ்

அது  ஏன்  அச்சுக்குப்  போகவில்லை ?

 உன் மேல் நம்பிக்கை இருக்கிறது, என்றாலும் எனக்காகக் கேட்கிறேன் என்று வைத்துக்கொள்.  எழுதுவதற்கு முன் இரண்டு தரப்பையும் நன்றாகத் தெரிந்து கொண்டாயா ?

 எனக்கு ஒரு விஷயம் குறித்து முழுசாகத் தெரியாமல் அது பற்றி எழுத நான் பேனாவைத்  திறப்பதில்லை.  அது  உனக்குத்  தெரியும்.

நீ வேதபுரம் போயிருந்தபோது, இங்கே ஒருவர் வந்திருந்தார். ஜனார்த்தனன்  என்று பெயர். அந்தப் பகுதியில் வாழ்கிற அட்வகேட். நம் பத்திரிகையின் நீண்டநாள் வாசகர். உன் நடவடிக்கைகள் அந்தப் பகுதியில் நிறைய ஆத்திரத்தைக் கிளப்பி விட்டிருப்பதாகச் சொன்னார். 

 அதெல்லாம்  சும்மா  பூச்சாண்டி.

உன்னால் பத்திரிகை  மீது  நிறைய  வழக்குகள்  வரும்  போலிருக்கிறது …

அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு இன்னும் கோர்ட்டுகளிடம் நம்பிக்கை இருக்கிறது.

  நானும்  அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால், நம்முடைய இந்தப் போக்கினால்  நாம்  அரசாங்கத்தின்  தயவை  இழந்துவிடுபோம்.

 நம்முடையது ஆளுங்கட்சிப் பத்திரிகையாக மாறிவிட்டது என்று எனக்குத் தெரியாது.

  நீ பிரச்சினையைப் புரிந்துகொள்ளாமல் பேசுகிறாய். நமக்கு அந்தப் பகுதி தொழிலதிபர்களிடம்  இருந்து நிறைய விளம்பரம் வருகிறது. அவர்கள் உன் கட்டுரைகளால்  கசப்படைந்திருக்கிறார்கள்.

“ விளம்பரத்திற்காகப் பத்திரிகையா, செய்திப் பத்திரிகை என்பதால் விளம்பரம் கிடைக்கிறதா ?

 இரண்டும்தான். உனக்குத் தெரியுமா ?  மூன்று  வருஷத்திற்கு  முன்னால்  நியூஸ் பிரிண்ட் – ஒரு டன் – ஐந்தாயிரம் ரூபாய். இப்போது எட்டாயிரம். அப்புறம் சம்பள அவார்டுகள். இப்போது பத்திரிகை என்பது ஒரு இண்டஸ்ட்ரி. அதற்கு ஒரு முழுப்பக்க விளம்பரத்திற்கு நாற்பத்தைந்தாயிரம் ரூபாய்  வரை  கொடுக்க  முடிந்த முதலாளிகளின் தயவு  வேண்டும்.

தன்னை வாங்க முடியாமல் போன மேலிடத்தால் பத்திரிகையை வாங்க முடிந்துவிட்டது என்பது அனந்தராமனுக்குப் புரிந்தது!

“ இதைப்பார் !  என்று  ஒரு  பத்திரிகைக்  கட்டிங்கை  எடுத்துப்  போட்டாள் இந்து.

“ நான் பிரதமராகும் வரை இந்த நாட்டில் கொத்தடிமைகள் இருப்பது எனக்குத் தெரியாது. தெரிந்த பின்னர் அதை ஒழிக்க நான் சட்டமியற்றினேன். அதன் விளைவு, எனக்கும் என் அரசாங்கத்திற்கும் எதிரிகள் – பணம் மற்றும் பல வழிகளில் பலம் பொருந்திய எதிரிகள் !

இதைப் சொன்னது இந்திராகாந்தி, ஒரு அரசாங்கமே திணறுகிறது. நான் நடத்துவது சாதாரண செய்திப் பத்திரிகை.

நான்  என்ன  செய்ய  வேண்டும்  என்கிறாய் ?

 நீ அனுசரித்துப் போக வேண்டும் என்று சொல்கிறேன். இந்தக் கட்டுரையைப் பிரசுரம்  செய்வதை  நிறுத்திவிடு !

இந்தப் பத்திரிகையின்  ஆசிரியன்  நான்.  எது  வரவேண்டும், வரவேண்டாம் என்று  தீர்மானிப்பது  என்  வேலை ! ’’

 “ அந்த  வேலையை  உனக்குக்  கொடுத்தது  நான்.

அதற்கு  விலை,  என்  சுதந்தரம்  என்று  எனக்குத்  தெரியாது.

“ இந்தப் தேசத்தில் பத்திரிகைச் சுதந்தரம் என்பது அதை பதிப்பிப்பவர்களின் சுதந்தரம், அதன் ஆசிரியர்களுடையதல்ல !

அந்தக்  கட்டுரை  வந்தே  தீரும் !

 அப்படி வந்தால், அது என் ஆணையை மீறுகிற விஷயம். நிறுவனத்தின் கட்டுப்பாட்டைக்  காப்பாற்றுவதற்குரிய  நடவடிக்கையை  எடுக்கத்  தயங்க  மாட்டேன்.

நடவடிக்கை ?

உன்னை ஆசிரியர் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டியிருக்கலாம். இந்த தேசத்தில் மாற்று ஆள் கிடைக்காமல் போகாது.

சட்டென்று அனந்திற்கு ஒரு விஷயம் புரிந்தது. இந்த தேசத்தில் பத்திரிகையாளர்களும் ஒருவகையில் கொத்தடிமைகள்தான். சோற்றுக்கும், துணிக்கும் சுலபமாக வாங்கப்படக்கூடிய கொத்தடிமைகள் பத்திரிகையாளன் மட்டுமல்ல ;  பெண்கள், அரசாங்க உத்தியோகஸ்தன், போலீஸ்காரன், நீதி பரிபாலிக்கிறவன், தேசத்தை ஆள்கிறவன், எல்லோரும் … எல்லோருடைய சுதந்திரத்திற்கும் ஒரு விலை உண்டு. சோறு, துணி, பணம், பதவி, பத்திரிகை விளம்பரம், இப்படி ஏதோ ஒரு விலை. இந்த விலை கொடுக்க முடிந்த அவரவர் சக்திக்கேற்ப அவரவர் சுதந்தரம். அவரவர்களுடைய அடி வயிற்றைக் தாக்காத வரை, அடுத்தவர்களுடைய சுதந்தரம் பற்றி இவர்கள் மேடையில் பேசவும், எழுதவும் கூடும். பெண் சுதந்தரம் பற்றி இந்து பேசியது போல !

அனந்த் ஒன்றும் பேசாமல் எழுந்து கொண்டான். அடுத்த பத்தாவது நிமிடம் அவனுடைய ராஜிநாமா கடிதத்தை ஆபீஸ் பையன் கொண்டு வந்தான்.

அவன்  வெளியில்  இறங்கி  நடந்தபோது  சுற்றிலும் இருள்  கவிந்திருந்தது.

– இதயம் பேசுகிறது

About the Author

One thought on “அடிமைகள்

  1. அடிமைகள் சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள். நான் ‘பத்திரிகைகுள்ளேயே’ என்று ஒரு கதை எழுதி கணையாழியில் வந்தது. ஒரு நிருபரை உள்ளூர் அரசியல்வாதி தன்னுடைய போட்டோ இலங்கைத்தமிழர் ஆதரவு போராட்ட க்ரூப் போட்டோவில் விடுபட்டது என்பதற்காக அடித்து நொறுக்கிவிடுவான்.
    மறு நாள்‘ அந்த அரசியல்வாதியின் போட்டோ விடுபட்டுப்போனதற்காக அதே பத்திரிகை நிர்வாகம் வருத்தம் தெரிவித்து செய்தி வெளியிட்டிருக்கும். இவன் அடிபட்ட செய்திமட்டும் உலகத்திற்கு மறைக்கப்பட்டிருக்கும்.
    ’பத்திரிகைக்குள்ளேயே நீ சுதந்திரத்த தேடறியா’ என்று அவனை நிர்வாகம் தொலைபேசியில் கேட்டுமுடிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these