கோவில் மணியில் தூங்கும் வண்ணத்துப் பூச்சி

தமிழுக்கும் வந்துவிட்டது ஹெய்கூ. உலக மொழிகள் எல்லாவற்றிலும் எழுதப்படும் இந்த வாமன வடிவத்தை, பொங்கிப் பெருகியப் புதுக்கவிதை வெள்ளம், வாழைச் சருகு போலத் தன்னுடன் அடித்துக் கொண்டு வந்து தமிழில் சேர்த்துவிட்டது. வாழை சருகென்ன, மல்லிகைச்சரம் போல என்று கூடச் சொல்லலாம். ரொமாண்டிக்காகக் கூட இருக்கும். ஆனால், ஹெய்கூவில் ரொமாண்டிசம் குறைவு.

தமிழுக்கு ஹெய்கூ வந்தது ஒரு வகையில் வரலாற்றின் சுழற்சி என்றுகூடச் சொல்லலாம். நீங்கள் ஜென் பெளத்தத்தைப் புரிந்து கொள்ளாமல் ஹெய்கூவை முழுவதுமாக ரசிக்க முடியாது. ஜென் பெளத்தத்தைச் சீனாவிற்கு எடுத்துச் சென்று பரப்பிய போதி தர்மர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இதோ இங்கிருக்கும் காஞ்சிபுரத்துக்காரர். ஜென்னைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், தாவோயிசத்தை மனதில் வாங்கிக் கொள்ள வேண்டும்.

சீனாவில் ஆறாம் நூற்றாண்டில் அரசாங்க சிப்பந்தியாக இருந்த ஒருவர் கண்டுபிடித்த மார்க்கம் தாவோயிசம். சும்மா இருப்பதே சுகம்என்று தாவோயிசத்தை ஒரு வரியில் சொல்லிவிடலாம். ஆனால் கூர்ந்து பார்த்தால் வேலையைச் செய்; ஆனால், அதற்காகப் பெருமைப்படாதே என்பதுதான் அதன் சாரம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஆசையில் இருந்து விடுதலை, ஆடம்பரமற்ற வாழ்க்கை, இயற்கையோடு ஒன்றி வாழ்வது, யுத்தங்களுக்கு எதிர்ப்பு இவைதான் தாவோயிசத்தின் அடிப்படை நம்பிக்கைகள்.

எளிமையான வாழ்க்கையில் லாபநோக்கம் இல்லை. அதனால் அதை வாழ அதிக சாமர்த்தியம் தேவையில்லை. அதனால் ஆசைகள் குறைகின்றன என்பது தாவோயிசம் முன்வைக்கும் தத்துவம்.

இந்து மதத்துக்காரர்களுக்கு நெருப்பைப் போல, தாவோயிசத்துக்காரர்களுக்கு தண்ணீர். தண்ணீரைப் போன்ற எளிமையான பொருள் இல்லை. ஆனால், வலுவான பொருட்களை தாக்கித் தகர்க்கும் ஆற்றல் கொண்டது அதைப் போல் வேறெதும் இல்லை என்பது தாவோயிசம் சுட்டிக் காட்டுகிற உவமை.

தாவோயிசம் புத்தகங்களின் எதிரி. புத்தகங்கள் மூதாதையர் விட்டுச் சென்ற குப்பைகள் என்று சொல்கிறது தாவோயிசம். ஒரு காலத்தில் மக்கள் எளிமையாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். அறிவு பெருகப் பெருக வாழ்க்கை சிக்கலாகிவிட்டது. புத்தகங்கள் எழுதத் துவங்கினார்கள். இதனால் மக்களின் துயரங்கள் அதிகமாகிவிட்டனஎன்கிறது தாவோயிசம்.

தாவோயிசத்தைப் பற்றி இவ்வளவு விரிவாகச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. பெருமளவில் இதன் பாதிப்புக்குள்ளான ஒரு சித்தாந்தம்தான் ஜென் பெளத்தம். ஜென் பெளத்தத்தை விளக்க வழக்கமாகச் சொல்லப்படும் கதை இது :

புத்தரின் பிரசங்கத்தைக் கேட்பதற்காக மக்கள் கூடினர். புத்தர் வந்தார். மேடைக்குப் போய் அமர்ந்து கொண்டார். அங்கே இருந்த ஒரு பூவைக் கையில் எடுத்துப் பார்த்தார். பக்கத்தில் இருந்த சீடன் காசியபனைப் பார்த்துப் சிரித்தார். கூட்டத்தைப் பார்த்து முறுவலித்தார். பூவைக் கீழே வைத்துவிட்டு எழுந்திருந்து போய்விட்டார். அவ்வளவுதான் பிரசங்கம் முடிந்துவிட்டது.

ஒருவார்த்தைகூடப் பேசாமல் எப்படி பிரசங்கம் நடந்ததாகச் சொல்ல முடியும்? வார்த்தைகள் தத்துவங்களைச் சொல்லலாம். ஆனால், உண்மைகளை விளக்காது. புத்தகங்கள், பாராயணங்கள், உபதேசங்கள் இவற்றின் மூலம் உண்மையைப் புரிந்து கொள்ள முடியாது. உண்மை என்பது மழையைப் போல எளிமையானது. மழையைப் பார்க்கலாம். கேட்கலாம். உணரலாம். ஆனால் அதை மொழி பெயர்க்க முடியாது என்பது ஜென்னின் அடிப்படை.

மரத்தைச் செதுக்குகிற ஒரு தச்சன் சொன்னான் : உளியை மரத்தின் மீது வைத்து சுத்தியலால் மெதுவாகத் தட்டினால் உளி நழுவி விழுகிறது. வேகமாக ஓங்கித் தட்டினால் உளி மரத்தில் சிக்கிக் கொள்கிறது. எவ்வளவு மெதுவாக அல்லது வேகமாகத் தட்ட வேண்டும் என்பதை புத்தகம் படித்துத் தெரிந்து கொள்ள முடியாது. தானாக வேலை செய்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்.

அனுபவம்தான் உண்மைகளைச் சொல்லும். சித்தாந்தங்கள் அல்ல என்பது ஜென் நம்பிக்கை. ஒரு பிரபலமான ஜென் கதை ஒன்றை சொல்கிறேன்:

அப்பா திருடன். வீடு புகுந்து கொள்ளை அடிப்பவன். அப்பாவுக்கு வயதாகிக் கொண்டு வருகிறது. அவருக்குப் பின் இந்தக் குடும்பத்தைக் காப்பாற்ற நான் இந்தக் தொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான் மகன். அப்பா, உன் தொழிலை எனக்குத் கற்றுத்தாஎன்று அவரிடம் போய் கேட்டான். சரி, ராத்திரி நான் தொழிலுக்குப் போகும்போது என்னுடன் வாஎன்று மகனைக் கூட்டிக் கொண்டு போனான் தந்தை. நள்ளிரவு. ஒரு வீட்டின் வேலி பிரித்து தந்தையும் மகனும் உள்ளே புகுந்தார்கள். வீட்டிற்குள் நுழைந்து விட்டார்கள். அங்கே ஒரு அறையின் மூலையில் ஒரு பெரிய ஆள் உயரப் பெட்டி, விலை உயர்ந்த பட்டாடைகள்அடுக்கி வைக்கிற பெட்டி. அப்பா மிக சாமர்த்தியாக பூட்டை நெம்பித் திறந்தான். மூடியைத் தூக்கினான். பையன் சற்றும் எதிர்பாராத தருணத்தில் அவனை உள்ளே தூக்கிப் போட்டுச்சரேலென பெட்டியை மூடி, பூட்டைப் பூட்டி விட்டான். விழித்துக் கொண்டவர்கள்தன்னைப் பிடிக்க வருவதற்குள் இருளில் நழுவி மறைந்துவிட்டான்.

பெட்டிக்குள் மாட்டிக் கொண்ட பையனுக்கு ஒரே ஆத்திரம். அப்பா இப்படிச்செய்து விட்டாரே என்ற கோபம். அவரை நம்பி வந்தவனை முதுகில் குத்தி விட்டாரே என்று வெறுப்பு. அவருக்கு உதவி செய்யத்தானே வந்தேன். என்னை மாட்டி வைத்துவிட்டாரே என்ற சுய பரிதாபம்.

சற்று நேரத்தில் வெறுப்பும் கோபமும் மறைந்து பயம் தலைதூக்கியது. இனி நான் எப்படிப் போவேன்? வெளியே வந்தால் உதை விழும். உதைக்கு பயந்து பெட்டிக்குள்ளேயே இருந்தால் மூச்சு முட்டி செத்துப் போவேன். என்ன செய்வது? நான் எப்படிப் போவேன்?

எப்படித் தப்பிப்பது என்ற கேள்வி மனத்தை உறுத்த உறுத்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது. தப்பித்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் புத்தி யோசிக்கத் துவங்கியது. யோசிக்க யோசிக்க ஒரு யோசனை பிறந்தது. எலி, பிறாண்டுவதுபோல பெட்டிக்குள இருந்து சப்தம் எழுப்பினான் பையன். இல்லத்தரசி வேலைக்காரியை எழுப்பி, பெட்டிக்குள் எலி பிறாண்டுகிறாற்போல் இருக்கிறது. போய்ப் பார் என்று கட்டளை இட்டாள். ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொண்டு மெல்ல பெட்டியின் அருகே சென்று அதைத் திறந்தாள் வேலைக்காரி. அந்த நிமிடத்திற்காகக் காத்துக் கொண்டிருந்த பையன் மூடி திறக்கப்பட்டவுடன் சரேலென வெளியே குதித்தான். மெழுகுவர்த்தியை ஊதி அணைத்தான். வேலைகாரியைப் பிடித்துத் தள்ளிவிட்டு ஓரே ஓட்டமாக ஓடத் துவங்கினான்.

திருடன் திருடன் என்று சத்தம் போட்டு ஊரைக் கூட்டினாள் வேலைக்காரி. எல்லோரும் விழித்தெழ்ந்து ஆளுக்கொரு விளக்கை ஏற்றிக் கொண்டு கையில் கழியை எடுத்துக் கொண்டு திருடனைத் துரத்தத்துவங்கினார்கள். இந்த அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்டு சற்றுதூரம் சென்று விட்ட மகன் பின்னால் ஆட்கள் துரத்தி வருவதை சப்தத்தின் மூலம் உணர்ந்தான். வழியில் இருந்த கிணற்றில் ஒரு பெரிய பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டு ஓடினான். பின்னால் வந்த கூட்டம் திருடன்தான் கிணற்றில் குதித்துவிட்டான் என்று எண்ணி கிணற்றைச் சூழ்ந்து நின்று கொண்டது. வீடு சேர்ந்த பையன் அப்பாவிடம் கேட்டான் : தொழில் கற்றுக் கொடுங்கள் என்று கேட்டுத்தானே உங்களிடம் வந்தேன்? நீங்கள்இப்படி இக்கட்டில் மாட்டிவிட்டு வந்து விட்டீர்களே? என்று கேட்டான். இப்போது உனக்கு தொழில் தெரிந்துவிட்டது மகனே என்றான் தந்தை.

புத்தகம்கற்றுக் கொடுக்காது என்பது மட்டுமல்ல, எதையும் ஒரு தத்துவமாக செய்துவிடாதே, ரேஷனலைஸ் பண்ணாதே என்கிறது ஜென் பெளத்தம். உண்மை நியாயங்களுக்கு அப்பாற்பட்டது. ரேஷனல்களுக்கு அப்பாற்பட்டது என்பது அவர்களுடைய வாதம்.

உன்னிடம் ஒரு மூங்கில் கழி இருந்தால் நான் என்னுடையதைத் தருகிறேன். உன்னிடம் ஒன்றுமே இல்லை என்றால் எல்லாவற்றையும் நானே எடுத்துக் கொள்கிறேன்என்பது ஜென்னின் பிரபலமான புதிர்களில் ஒன்று. இந்தப் புதிரை நீங்கள் ஒருநாளும் விடுவிக்க முடியாது. ஏனெனில் இது இர்ரேஷனலானது. புதிரை விடுவிக்க முயலும்போது நமக்க்கு மிஞ்சுவது தத்துவங்களும் வார்த்தைகளும்தான்.

உயிருள்ள வார்த்தைகளை பரிசீலி; செத்தவற்றை அல்லஎன்கிறது ஜென் பெளத்தம். அனுபவத்தைச் சொல்பவை உயிருள்ள வார்த்தைகள். தத்துவமாக உறைந்து போனவை செத்துப் போன வார்த்தைகள்.

இவைதான் ஹெய்கூவின் ஆதாரமான சித்தாந்தம். ஒரு கவிதை வாழ்ந்து பெற்ற அனுபவத்தைச் சொல்ல வேண்டும். மிகக் குறைந்த வார்த்தைகளில் சொல்ல வேண்டும். கவிதை என்பது ரேஷனலாக, லாஜிக்காக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதாவது அது ஏதேனும் செய்தியைச் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், அது ஒரு அனுபவத்தைச் சொல்லியாக வேண்டும்.

ஹெய்கூவைப் பற்றி பேசும் போது பாரதியார், கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையவன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன் அவனே கவிஎன்கிறார்.

ஹெய்கூவின் இலக்கணம் மிக எளிது. ஹெய்கூ என்பது 17 Syllables (ஒலிக் குறிப்புகள் என்று சொல்லலாமா?) கொண்ட ஒரு சிறிய கவிதை. பனிரெண்டாவது ஒலிக்குறிப்புக்கு பிறகு இருக்கும் கருத்தில் ஒரு திருப்பம் அமைந்திருக்கும். இதைச் சட்டென்று புரிந்து கொள்வதற்காக இந்த ஒலிக்குறிப்புகளை மூன்று வரிகளாக அமைத்துக் கொள்வதுண்டு. அதாவது ஆறு, ஆறு Syllable களாக. 12வது Syllable வரை இரண்டு வரிகள். கருத்தில் திருப்பம் நேரும் 13வது Syllable – இல் இருந்து மூன்றாவது வரி. இந்தக் கருத்துத் திருப்பம் ஏற்படும் மூன்றாவது வரி, முதல் இரண்டு வரிகளுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு புதிர்போல் அமைக்கப்படும். புதிர்களை விடுவிக்க முயலாதே என்ற ஜென் சித்தாந்தத்தின் தாக்கத்தினால் நேர்ந்த அமைப்பு இது. இதுவே ஹெய்கூவின் அடையாளமாகவும், அதே சமயத்தில் முரண்பாடுகளுக்குக் காரணமாகவும் ஆயிற்று.

ஜென் பெளத்தம் பிற்காலத்தில் ரின்ஜாய், சோட்டோ என இரு பிரிவுகளாகப் பிரிந்தது. இதில் சோட்டோ, தியானம் மூலம் விழிப்புணர்வு பெற வழிகாட்டுவது. ரின் ஜாய் பிரிவு வளர்ச்சி அடைந்தபோது ஹெய்கூ பரவலாகப் புகழ் பெற்றது. சம்பிரதாயமான ஹெய்கூ என்றால் எந்தப் பருவத்தில் நிகழ்ந்த (அதாவது வசந்தமா, கோடையா, கார்காலமா) அனுபவம் என்பதைக் குறிக்கும் குறிப்பு ஒன்று இருக்கும். நவீன ஹெய்கூவில் உவமைகள் இருக்காது. அதாவது இருக்கக் கூடாது. அனுபவத்தைத் தத்துவமாக்கும் முயற்சி உவமை என்பதால் ஹெய்கூவில் உவமைக்கு இடம் கிடையாது.

ஹெய்கூவின் பிரபல கவிஞர் பாஷோ 17ம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்தவர்.

பழைய குளம்

தவளை குதிக்க

நீரில் சப்தம்

என்பதுதான் உலகின் முதல் ஹெய்கூ. இதை எழுதியவர் பாஷோதான். இந்தக் கவிதை எழுதப்பட்டபோது இது நிஜமாகவே கவிதைதானா, இது நமக்கு எதையாவது உணர்த்துகிறதா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்த இடத்தில் பாஷோ இந்தக் கவிதையை எழுதிய சூழ்நிலையைப் புரிந்து கொண்டால் ஒருவேளை கவிதையும் புரிந்து விடலாம். புக்கோ என்ற குருவிடம் பாஷோ ஜென் கற்றுவந்த நேரம் அது. ஒரு நாள் குரு கேட்டார் : இப்போதெல்லாம் நீ எப்படி இருக்கிறாய்?  சமீபத்திய மழைக்குப் பிறகு பாசி இன்னும் பச்சையாக இருக்கிறது  என்றார் பாஷோ பதிலாக. குரு அடுத்த கேள்வியை வீசினார்: பாசி பச்சையாக வளர்வதற்கு முன் பெளத்தம் எப்படி இருந்ததுஇது பைபிளில் வரும் ஒரு வார்த்தை குறித்த மறைமுகமான கேள்வி. ஆப்ரஹாமுக்கு முன்பே நான் இருந்தேன்என்பது பைபிளில் ஏசு சொல்லும் ஒரு வாசகம். அதாவது கிறித்துவத்திற்கு முன்பும் கிறிஸ்து இருந்தார்என்பது சூட்சுமமான அர்த்தம். கிறிஸ்துவராக இருந்தால் குருவின் இந்தக் கேள்விக்கு நான் இருந்தேன்என்று சொல்லி இருப்பார். ஆனால் பாஷோ ஜென் ஆயிற்றே! பழைய குளத்தில் தவளை குதித்தது. நீரில் சப்தம் என்றுதான் பதில் சொன்னார். அதாவது தவளை முன்பு கண்ணுக்குத் தெரிவதாக இருந்தது. அது இப்போது நீரில் மறைந்துவிட்டது. ஆனால் தவளை இல்லை என்று பொருளில்லை என்பதுதான் பாஷோ சொன்னதன் அர்த்தமாக இருக்க வேண்டும்.

எதையுமே சித்தாந்தப்படுத்தக் கூடாது ; நியாயப்படுத்தக் கூடாது என்ற ஜென்னின் நம்பிக்கையினாலோ என்னவோ இதைப் போன்ற விளக்கங்களும், ஜென்னையும், ஹெய்கூவையும் முடிச்சு போடுவதையும் குறைகூறி வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன. ஜென் ஜென்தான், ஹெய்கூ, ஹெய்கூதான். ஹெய்கூ வெறும் கவிதை. அதில் ஜென் இருக்கலாம். ஆனால், இருந்தே ஆக வேண்டுமென்று சொல்ல முடியாது என்று வாதிடப்பட்டது.

இதே காலகட்டத்தில் எழுதப்பட்ட இன்னொரு தவளைக் கவிதையைப் பார்த்தால் சம்பவங்களின் அல்லது அனுபவங்களின் தொடர்ச்சி கூடாது. ரேஷனலைஸ் பண்ணாமல் இருப்பது என்பவை நிராகரிக்கப்பட்டு இருப்பது தெரியும்.

சிகாகு என்பவர் எழுதிய அந்தக் கவிதை இதோ :

பச்சைத் தவளை

வாழை இலைமேல்

 நடுக்கம்

 ஆனால் பாஷோவின் கவிதைகள் பெரும்பாலும் ஜென்னை அடிப்படையாகக் கொண்டு அமைந்தன.

ஒரு கூரையின் கீழ்

விபச்சாரிகள் உறங்குகிறார்கள்

காட்டு மலரும் நிலவும்கூட

ஆனால் லாஜிக்கை மறுப்பது என்பது நாளடைவில் ஹெய்கூவை விடுகதை என்ற நிலையில் கொண்டு நிறுத்தியது.

ஜாடிக்குள் ஆக்டோபஸ்

தற்காலிகக் கனவுகள்

கோடை நிலா

இறுதியில் ஜென் இருக்கிறதோ இல்லையோ, ஹெய்கூவில் அனுபவம் நிச்சயம் இருந்தாக வேண்டும் என்ற கருத்து நிலைத்தது.

சியோ என்பவர் ஹெய்கூ எழுதும் ஒரு பெண் கவி. அவர் வாழ்ந்த ஊரில் அவர் பிரபலமானவர். இன்னும் சற்று பெரிய வட்டத்தில் புகழ் பெற வேண்டும் என்பது அவர் விருப்பம். தனது ஊருக்கு வந்திருந்த பெரிய கவி ஒருவரைப் பார்த்து தனது ஹெய்கூக்களைக் காண்பித்தார்.

அந்தப் பெரியகவி குயில் என்பதைப் பாடுபொருளாகக் கொடுத்து ஒரு ஹெய்கூ எழுதிக் கொண்டு வரும்படி சொன்னார். மறுநாள் சியோ எழுதிக் கொண்டு வந்த ஹெய்கூக்கள் எல்லாம் ஹெய்கூக்களே அல்ல என்று பெரியவர் நிராகரித்தார். இரவு முழுக்க யோசித்து யோசித்து பல கவிதைகளை எழுதி தனக்கே திருப்தி இல்லாமல் அவற்றைக் கிழித்துப் போட்டார் சியோ. இதற்குள் பொழுது விடிந்துவிட்டது. இப்போது சியோ ஒரு கவிதை எழுதினார்.

இரவு முழுவதும்

குயில், குயில்

இறுதியில் விடிந்தது

மறுநாள் இதை பெரிய கவியிடம் காண்பித்தபோது இதுதான் கவிதை என்று சொல்லி சந்தோஷக் கூச்சலிடார் அவர். இதை கவிதை என்று அவர் ஒப்புக் கொள்ளக் காரணம் அது செயற்கையாக இல்லை. தன்னை முன்நிறுத்திக் கொள்ளும் ஈகோ இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக நிஜமான அனுபவம் இருக்கிறது.

இந்த 300, 350 ஆண்டுகளில் ஜப்பான் எவ்வளவோ மாறி இருக்கிறது. ஜப்பானியர்களின் வாழ்க்கை மாறி இருக்கிறது. அவர்களுடைய வேல்யூஸ் மாறி இருக்கிறது. ஆனால், ஹெய்கூவின் அடிப்படை அம்சமான அனுபவம் தோய்ந்தது கவிதை என்பது மாறவே இல்லை.

ஹெய்கூவைப் பற்றி எண்ணும் போதெல்லாம் ஒவியரும், ஜப்பானியக் கவிஞருமான டோகுகாவா எழுதிய ஒரு கவிதைதான் எனக்கு நின்னைவுக்கு வரும்.

கோவில் மணியில்

ஒட்டிக்கொண்டு தூங்குகிறது

ஒரு வண்ணத்துப்பூச்சி

அந்த பிரம்மாண்டமான மணி எப்போது வேண்டுமானாலும் அடிக்கலாம். அதன் அதிர்வு கேட்டு இந்த சின்னப்பூச்சி மிரண்டு போகலாம். குழம்பித் தத்தளிக்கலாம். பயத்தில் செத்துப் போகலாம். அல்லது ஒன்றுமே நிகழாததுபோல் அந்த இடத்தைவிட்டுப் பறந்து போகலாம். ஜப்பானின் கலாச்சாரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஹெய்கூ என்ற வண்ணத்துப்பூச்சி என்றைக்குப்பறக்கும் என்று தெரியாது.

ஆனால், அந்த வண்ணத்துப்பூச்சி தமிழுக்குப் பறந்து வந்திருக்கிறது. ஒரு வகையில் வரவேற்கப்பட வேண்டியதுதான். வார்த்தைகளே கவிதை, போதனை செய்வதே கவிதை, புலம்புவதே கவிதை, புரியாமல் புதிராக எழுதுவதே கவிதை என்று தத்தளித்துக் கொண்டிருக்கும் தமிழ்க் கவிதையில் ஹெய்கூ ஒரு சில ஒழுங்குகளைக் கொண்டு வரக்கூடும். வாழ்க்கை அனுபவம் இல்லாமல் கவிதை எழுதக் கூடாது: அந்த அனுபவத்தைப் பொதுமைப்படுத்தி கவிதையை லாஜிக்காக ஆக்கிவிடக் கூடாது; அந்த அனுபவத்தின் மீது சித்தாந்த சுமையை ஏற்றிவிடக் கூடாது; ஒரு கவிதை வாழ்ந்து பெற்ற அனுபவத்தைச் சொல்ல வேண்டும். மிகக் குறைந்த வார்த்தைகளில் சொல்ல வேண்டும். கவிதை என்பது ரேஷனலாக, லாஜிக்கலாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதாவது அது ஏதேனும் ஒரு செய்தியைச் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், அது ஒரு அனுபவத்தைச் சொல்லியாக வேண்டும்.

ஹெய்கூ மெல்ல மெல்ல கவிதையை வார்த்தைகளில் இருந்து விடுவித்து தொனியை நோக்கி இட்டுச் செல்லும் என்று தோன்றுகிறது. ஒரு கவிதையின் பெருமை அதன் வார்த்தைகள் அல்ல. தொனிதான். காவியத்தின் ஆன்மா தொனி என்பது சமஸ்கிருதம் வற்புறுத்தும் குறிக்கோள்.

ஆரம்பகாலத்தில் தமிழில் புதுக்கவிதை எழுதப்பட்டபோது அது மேலைநாட்டுக் கவிதைகளின் உந்துதலால் எழுதப்பட்டதாக அமைந்தது. புதுக்கவிதையின் இன்றைய வீழ்ச்சிக்குக் காரணம்.

மேற்குக் கவிதையில் சொல் மிகுதி. எண்ணத்தை அப்படியே வீண் சேர்க்கை  இல்லாமல் சொல்லும் வழக்கம் ஐரோப்பியக் கவிதையிலே இல்லை. எதுகை, சந்தம் முதலியவற்றைக் கருதியும், சோம்பல் குணத்தாலும், தெளிவு இல்லாமையாலும்  பல சொற்களை சேர்த்து வெறுமே பாட்டை அது போகிற வழியெல்லாம் வளர்த்துக் கொண்டு போகிற வழக்கம் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் அதிகம் இருக்கிறது. நம்முடைய மனத்திலுள்ள கருத்தை நேரே வெளியிடுவதில் மேற்குப் புலவோர் கதைகளை எழுதுவோரைக் காட்டிலும்சக்தி குறைந்து இருக்கிறார்கள். ஜப்பானிலே அப்படி கிடையாது. வேண்டாத சொல் ஒன்றுகூட சேர்ப்பதில்லைஎன்று மாடர்ன் ரிவ்யூவை மேற்கோள் காட்டி பாரதியார் எழுதுகிறார். இதற்கு

தீப்பட்டெரிந்தது காடு

வீழும் மலரின்

அமைதி என்னே!

என்ற ஹெய்கூவை உதாரணம் காட்டி திருக்குறளோடு ஒப்பிட்டு கிழக்குத்திசை கவிதையிலே இவ்வித ரசம் அதிகம்என்றும் குறிப்பிடுகிறார்.

சொற்செட்டு மட்டுமல்ல, நமக்கும்கீழை நாடுகளுக்கும் ஏறக்குறைய ஒன்றே போன்ற தத்துவப் பின்னணியும் உண்டு. மேலை நாடுகளைப் போல, சூன்யத்தை நம்புபவர்கள் அல்ல நாம். பூரணத்தை நம்புபவர்கள். இங்கே Being in Nothingness கிடையாது. பரிபூரணனுக்கே அடிமை செயது வாழ்வோம்என்பதுதான் உண்டு. மேலை நாடுகளின் தத்துவச் சிந்தனை லாஜிக்கை அடிப்படடையாகக் கொண்டது. கீழைநாடுகளின் தத்துவம் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது.

சொற்காமம் குறைத்து தத்துவம் சேர்ந்தால் ஒரு குட்டைபோல் தேங்கியிருக்கும் தமிழ் கவிதை ஆற்று நீர்போல தெளிவும் வலிவும் கொண்டதாக எதிர்காலத்தில் மாறும்.

கணையாழி மார்ச், 1991

 

About the Author

maalan

Maalan, born in 1950 in Srivilliputhur, Tamil Nadu, emerged as a literary figure with a penchant for poetry. At the age of 16, he made his debut in the literary world through both poetry and prose. From 1970 to 1985, he contributed numerous short stories and poems in literary journals throughout Tamil Nadu.

3 thoughts on “கோவில் மணியில் தூங்கும் வண்ணத்துப் பூச்சி

  1. சமீபத்தில் ஐயா மனுஷ்யபுத்திரன் ஹைக்கூவைப்பற்றி பேசியதை அறிந்தேன் வரலாற்று உண்மையை ஆழமாக பார்த்தால் தமிழுக்கும் ஹைக்கூவிர்க்கும் பாரதிக்கு முன்பே தொடர்பிருப்பதாக தோன்றுகிறது . அருமையான கட்டுரை நன்றி .

  2. அற்புதமான கட்டுரை சார். மிகத் தெளிவு. புதிதாய் ஹைக்கூ எழுதப் புகுபவர்கள் நிச்சயம் வாசிக்கவேண்டிய கட்டுரை. அந்தக் குயில் கவிதையைப் படித்ததும் என்றோ ஒரு நாள் நான் எழுதிய குயில் கவிதை நினைவுக்கு வந்தது.

    எங்கோ ஒரு
    குயில் பாடுகிறது
    எனக்கும் சேர்த்து.

    இதுதான் அக்கவிதை.

    கட்டுரைக்கு மிக்க நன்றி சார்.

    -பித்தன் வெங்கட்ராஜ் ✍️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these